காலேஜ் படிப்புக்கு போன மகன்.. 12ஆம் வகுப்பு படிக்க வந்த முத்துக்காளை.. இவங்களுக்குள் இப்படி ஒரு விஷயமா?
சென்னை: நடிகர் முத்துக்காளை கோலிவுட்டில் ஸ்டண்ட் மேனாக தனது பயணத்தை தொடங்கி பிறகு காமெடி நடிகராக மாறியவர். வடிவேலு உள்ளிட்டோருடன் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து ஸ்கோர் செய்த அவர்; ஒழுங்காக படிக்காததால் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்தார். எனவே வயது கடந்தாலும் கல்வி கற்க முடிவெடுத்து படிக்கவும் ஆரம்பித்து பட்டமும் வாங்கினார். அவரது மகனும் சமீபத்தில்தான் கல்லூரிக்கு சென்றார்.
'செத்து செத்து விளையாடுவோமா'.. இந்த வாக்கியத்தை எப்போது சொன்னாலும் பெரும்பாலானவர்கள் எண்ணத்தில் முத்துக்காளையின் முகம் வந்து போகும். சண்டை கலைஞராக தனது திரை பயணத்தை தொடங்கிய முத்துக்காளைக்கு காலம் நடிகராகும் வாய்ப்பை கொடுத்தது. எதுவாக இருந்தாலும் சினிமாவில் வென்றே ஆக வேண்டும் என்ற தீவிரத்தோடு நடிப்பில் தனி அடையாளம் பெற ஆரம்பித்தார்.
வடிவேலுவுடன் கூட்டணி: வடிவேலுவுடன் இணைந்து ஏகப்பட்ட காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார். முக்கியமாக வடிவேலு அளவுக்கு அவருடன் நடிக்கும்போது தனி கவனம் பெறும் நடிகர்களில் இவரும் முக்கியமானவர். வைகை புயலும், இவரும் இணைந்து நடித்த, 'சிக்கன் 65' காமெடி, செத்து செத்து விளையாடுவோமா காமெடி என அத்தனையும் க்ளாசிக் ரகம். வடிவேலு மட்டுமின்றி மற்றவர்களுடனும் இணைந்து காமெடி செய்திருக்கிறார்.

படிப்பில் கெட்டி: இவர் பள்ளி படிப்பை ஒழுங்காக படிக்காதவர். திரைத்துறைக்கு வந்த பிறகு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அவர்; திறந்த பல்கலைக்கழகத்தில் இளநிலை வரலாறு பட்டம் பெற்றார். அதுமட்டுமின்றி முதுநிலை பட்டதாரியாகவும் மாறினார். அவரது இந்த செயல்பாடு பலருக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இருந்தது. அவருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும் குவிந்தன.
மகன் கல்லூரியில்: சமீபத்தில்தான் அவரது மகன் வாசன் முரளி கல்லூரியில் படிக்க சேர்ந்திருக்கிறார். அவர் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க முத்துக்காளை வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது, ஆறாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த அவர் பின் நாட்களில் கல்வியின் முக்கியத்துவத்தை தெரிந்துகொண்டாராம். அவர் திரைத்துறைக்கு வரும் முன்பு மளிகை கடை, பவர் லூம் வேலை உள்ளிட்ட வேலைகளை செய்திருக்கிறார். அதனையடுத்துதான் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு பஸ் ஏறியிருக்கிறார்.
தந்தை +2: இங்கே வந்து சினிமா வாய்ப்புகள் பெற்று நடித்து பிறகு படித்து பட்டம் வாங்கியிருக்கும் அவர்; பிஹெச்டி முடிப்பதற்கு திட்டமிட்டிருக்கிறார். ஆனால் அவருக்கு ஒரு சிக்கலாக முனைவர் பட்டம் பெறுவதற்கு 12ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. இவர் பத்தாம் வகுப்புவரை மட்டும்தான் படித்திருக்கிறார். இந்த சிக்கலை தீர்ப்பதற்கு இப்போது 12ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாராம்.
முத்துக்காளை எடுத்திருக்கும் சபதம்: மார்ச் மாதம் நடக்கும் தேர்வை எழுதவிருக்கிறார். இதை முடித்துவிட்டு கண்டிப்பாக முனைவர் பட்டம் வாங்கியே தீருவேன் எனவும் கூறியிருக்கிறார். இதனை அவர் பிரபல வார நாளிதழ் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்களோ மகன் கல்லூரியில், தந்தை 12வது வகுப்பில். எந்த வயது ஆனாலும் கல்வியை கற்க எதுவும் தடையில்லை என்பதை முத்துக்காளை நிரூபித்திருப்பதாக அவருக்கு வாழ்த்துகள் கூறிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











