குடி பழக்கத்திலிருந்து மீட்டது படிப்பு மட்டும்தான்.. 58 வயதில் டிகிரி வாங்கிய முத்துக்காளை உருக்கம்
சென்னை: நடிகர் முத்துக்காளை தமிழ் சினிமாவில் ரொம்பவே பிரபலம். அவரது உருவமும், அவர் பேசும் விதமும் அனைவரையும் ரசிக்க வைத்தவை. வடிவேலுவுடன் பல படங்களின் காமெடிகளில் நடித்து அனைவரிடமும் அடையாளப்பட்ட அவருக்கு 58 வயது. படிப்புக்கு வயது தடை இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக இப்போது அவர் மூன்று டிகிரிகளை வாங்கியிருக்கிறார். இந்த சூழலில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
வடிவேலு தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்தான். ஆனால் அவரது காமெடி காட்சிகள் அனைத்தும் ஒர்க் அவுட்டாக அவர் மட்டுமே காரணம் இல்லை என்பதுதான் உண்மை. அவரது குரூப்பில் நடித்தவர்களும் அந்தக் காட்சிகள் உயிர் பெற காரணமானவர்கள். அப்படி ஒருவர்தான் நடிகர் முத்துக்காளை. ராஜபாளையத்தை சொந்த ஊராகக் கொண்ட அவர் ஸ்டண்ட் கலைஞராக வேண்டும் என்ற முடிவோடு சென்னைக்கு வந்தார்.

நடிகர்: ஆனால் சினிமா பலருக்கு நினைத்ததை நினைத்தபடி கொடுப்பதில்லைதானே. ஸ்டண்ட் கலைஞராக இருந்தவரை ஒரு நாள் ஆக்டராக மாற்றியது கோலிவுட். அதனையடுத்து 1997ஆம் ஆண்டு வெளியான பொன்மனம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனையடுத்து தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. இப்படிப்பட்ட சூழலில் வடிவேலுவுடன் அவர் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்.
செம காம்போ: வடிவேலுவுடன் முத்துக்காளை இணைந்து நடித்த காமெடி காட்சிகள் மெகா ஹிட்டடித்தன. வா செத்து செத்து விளையாடுவோம், கோழி 65, பூசணிக்காயை தூக்கிக்கொண்டு ஓடுவது போன்ற காமெடி காட்சிகள் இன்றுவரை சிரிப்பு வெடியை பற்ற வைப்பவை. வடிவேலு மட்டுமின்றி மற்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் காமெடி செய்திருக்கிறார் முத்துக்காளை.
குடிக்கு அடிமை: நன்றாக போய்க்கொண்டிருந்த அவரது பாதை குடியால் சீரழிந்தது. ஒருகட்டத்தில் குடிக்கு அடிமையாகிவிட்டார். இதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் இல்லாமல் போயின. திரையில் அவரை காண முடியாததால் ஒருவேளை முத்துக்காளை உயிரிழந்துவிட்டாரோ என்றெல்லாம் பலர் பேசினார்கள். நல் வாய்ப்பாக அப்படி எதுவும் நடக்கவில்லை.மேலும் தான் உயிரோடு இருப்பதாக சமூக வலைதளம் மூலமாக உறுதிபடுத்தவும் செய்திருந்தார்.
டிகிரி: குடி பழக்கத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த முத்துக்காளைக்கு வயது இப்போது 58. இந்த சூழலில் அவர் மூன்று டிகிரிகளை வாங்கியிருக்கிறார். அது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருக்கும் சங்கம்பட்டிதான் எனது சொந்த ஊர். சிறு வயதிலிருந்தே அதிக விளையாட்டுத்தனம் இருந்ததால் படிப்பில் கவனத்தை செலுத்த முடியவில்லை. அதுமட்டுமின்றி பாட புத்தகம் வாங்கவும் காசு இல்லாததால் வேலைக்கு சென்றேன்.
வாய்ப்பு: ஸ்டண்ட் நடிகராக சென்னைக்கு வந்த பிறகு படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. கல்வியா, செல்வமா, வீரமா என்ற பாடல் வரியை போலவே முதலில் ஸ்டண்ட்டின் மூலம் வீரத்தை கற்றேன். அதன் மூலம் வரும் பணத்தை வைத்து கல்வியை கற்க முடிவு செய்தேன். அப்படி கல்வியை பெற எனக்கு 50 வயது ஆகிவிட்டது. படிக்க வேண்டிய வயதில் படித்துவிடுங்கள். அதுமட்டும்தான் தலைமுறையை காப்பாற்றும்.
மீட்டது கல்விதான்: நான் குடிக்கு அடிமையாக இருந்தபோது அதிலிருந்து என்னை மீட்டது படிப்பு மட்டும்தான். இளமையில் எதையெல்லாம் இழந்தேனோ அதையெல்லாம் மீட்டெடுக்க ஆசைப்பட்டேன். அதன் ஒரு படியாக படிக்க வேண்டும் என்ற ஆசையை இப்போது நிறைவு செய்துகொண்டேன். நான் படிப்பதை பார்த்து பலர் கேலி செய்தார்கள். ஆனாலும் படித்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் மூன்று பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











