புடவைகளுக்கென தனி வீடு வைத்திருக்கும் நடிகை.. தினமும் புது புடவை.. சினேகாவையே மிஞ்சிடுவாங்க போல!
சென்னை: சினிமா பிரபலங்கள் எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமாகத்தான் பல விஷயங்களைச் செய்கின்றார்கள். அதற்கான காரணத்தை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தாலும், கிசுகிசுக்களில் காரணத்தோடு கண்டதையும் சேர்த்து காற்றில் பறக்கவிட்டுவிடுவார்கள். நடிகை சினேகாவை ஒருமுறை ஒருவர், உங்களிடம் புதுத் துணிகளே இல்லையா? எப்போதும் அணிந்த துணிகளையே திரும்பத் திரும்ப அணிந்து கொண்டு இருக்கின்றீர்கள் எனக் கேட்டுள்ளனர்.
அதன் பின்னர், சினேகா தான் ஒருமுறை அணிந்த துணியை மீண்டும் அணியக்கூடாது என முடிவெடுத்துள்ளார். இந்தத் தகவல் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் மூத்த நடிகை ஒருவர் தான் வைத்திருக்கும் புடவைகளுக்கென தனி வீடே வைத்துள்ளாராம். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை நளினி, 80களில் முன்னணி நடிகைளில் ஒருவராக வலம் வந்தவர். வெள்ளித்திரை அதன் பின்னர் சின்னத்திரை என இவர் தொடர்ந்து லைம் லைட்டில் இருந்து கொண்டுதான் இருந்தார். இவர் முன்னணி நடிகையாக இருந்தபோது கேப்டன் விஜயகாந்த், ராமராஜன், மோகன் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். ராணுவ வீரன் என்ற படத்தில் சூப்பர் ஸ்டாரின் தங்கையாக நடித்துள்ளார். ஜனரஞ்சகமான படங்கள் மட்டும் இல்லாமல், பல பக்திப் படங்களிலும் நடித்துள்ளார் நளினி. நடனத்தில் கைதேர்ந்தவராக திகழ்ந்தார்.
சினிமாவில் கொடிக்கட்டிப் பறந்து கொண்டு இருந்த நளினி, நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 10 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பின்னர் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். விவாகரத்துக்குப் பின்னர், தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார் நளினி. விவாகரத்துக்குப் பின்னரே அதிகம் சீரியல்களில் நடிக்கத்தொடங்கினார்.

புடவைக்கு வீடு: இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள விஷயம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதாவது, எனக்கு தினமும் கட்டுவதற்கு புதிய புடவை இருக்கணும். எனது குழந்தைகளே தினமும் போன் செய்து இன்று கட்டுவதற்கு புது புடவை இருக்கின்றதா? இல்லை அனுப்பி வைக்கவா எனக் கேட்பார்கள். படப்பிடிப்புக்காக எங்கு போனாலும் அங்கு, புடவைகளை வாங்கிவிடுவேன். புடவைகளை வைப்பதற்கு மட்டுமே தனி வீடு வைத்துள்ளேன். ஒரு முறை ஒரு புடவையைக் கட்டிவிட்டால், மீண்டும் அந்தப் புடவையைக் கட்டமாட்டேன். பல ஆண்டுகளாக இதைப் பின் பற்றி வருகின்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ஆச்சரியம்: நளினியின் இந்த பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. ஏற்கனவே நடிகை சினேகா தான் ஒருமுறை கட்டிய புடவையை மறுமுறை கட்டமாட்டேன் என தெரிவித்தார். இப்போது நடிகை நளினி புடவைகளை வைப்பதற்கே தனி வீடு வைத்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றது. இது மட்டும் இல்லாமல், பெரும்பாலான நடிகைகள் அப்படித்தான், தாங்கள் ஒருமுறை அணிந்த உடையை மறுமுறை அணிவதில்லை. ஆனால் அதனை அவர்கள் வெளியே சொல்லுவதில்லை என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











