மனதை நோகடிக்காதீர்கள்.. வாழ விடுங்கள்.. மகனை விமர்சித்தவர்களுக்கு நெப்போலியன் உருக்கமான வேண்டுகோள்
சென்னை: தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வந்த நெப்போலியன் தனது மகன் தனுஷுக்கு திருமணம் செய்துவைக்கப்போகிறார். தனுஷின் திருமணம் ஜப்பானில் விரைவில் நடக்கவிருக்கிறது. இதற்காக அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு குடும்பத்தோடு கப்பலில் சென்றிருக்கிறார் அவர். இந்தச் சூழலில் தனுஷின் திருமணத்தை வைத்து அவரை பலரும் விமர்சிக்க தொடங்கினார்கள். பொறுத்து பொறுத்து பார்த்த நெப்போலியன் இப்போது உருக்கமான வேண்டுகோளை வைத்திருக்கிறார்.
பாரதிராஜாவால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நெப்போலியன் அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். அவரது மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருப்பதால் குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆனார். அங்கு தொழில் செய்துவரும் அவர்; தனது மகனுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தார். அதன்படி பெண் பார்த்து நிச்சயதார்த்தமும் அண்மையில் நடந்து முடிந்தது. இதனையடுத்து திருமணம் ஜப்பானில் விரைவில் நடக்கவிருக்கிறது. இதனையொட்டி குடும்பத்தோடு ஜப்பான் சென்றிருக்கிறார் அவர்.

விமர்சனம்: தனுஷால் விமானத்தில் பயணப்பட முடியாது; எனவே கப்பலில் சென்றிருக்கிறார்கள். இதற்கிடையே சிலர் தனுஷுக்கு ஏன் இப்போது திருமணம் என்று இஷ்டத்துக்கு விமர்சனத்தை முன்வைத்துவந்தனர். முக்கியமாக பயில்வான் ரங்கநாதன் போன்றோர் எல்லாம், தனுஷால் ஒரு பெண்ணின் வாழ்க்கை சீரழியப்போகிறது என்று எல்லை மீறி பேசினர். இவற்றுக்கெல்லாம் நெப்போலியன் பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. இந்நிலையில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை அவர் வைத்திருக்கிறார்.
நெப்போலியனின் வேண்டுகோள்: அவர் வைத்திருக்கும் வேண்டுகோளில், "எனது அன்பு நண்பர்களே, உலகமெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களே! எங்களது மூத்த மகன் தனுஷின் எட்டு வருட கனவு.. இந்தியாவில் பிறந்தாலும் சூழ்நிலை காரணமாக உலகத்தின் ஒரு கோடியில் இருக்கும் அமெரிக்காவில் வசிக்கிறோம். இப்போது மறுகோடியான ஜப்பானுக்கு பயணம் செய்ய ஒரு வருடம் திட்டமிட்டு ஆறு மாதங்களாக அதற்கு செயல் வடிவம் கொடுத்து ஒரு மாதமாக பயணம் செய்து இப்போது தனுஷின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறோம்.
சாதித்துவிட்டான்: தனுஷுக்கு இது எல்லையில்லா மகிழ்ச்சி. எங்களுக்கு இது அளவில்லா மன நிறைவு.சாதித்துவிட்டான். இத்தருணத்தில் சில விஷயங்களை உங்களிடம் பகிர ஆசைப்படுகிறேன். எங்கள் வாழ்வை தவறாக விமர்சிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைக்கிறேன். நம் பெற்றோரின் கனவுக்காகவும், நமது கனவுக்காகவும், நமது பிள்ளைகளின் கனவுக்காகவும் அவசியம் வாழ வேண்டும். அப்படி வாழ்ந்துதான் பார்க்க வேண்டும். கடமையை நிறைவேற்ற வேண்டும். வாழ்க்கை ஒருமுறைதான். வாழ்ந்துதான் பார்ப்போமே.
யாதும் ஊரே யாவரும் கேளீர்: 'அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது'.. இந்த உலகட்த்துக்கு நாம் எதையும் கொண்டு வரவில்லை; எதையும் கொண்டு போகப்போவதுமில்லை. யாதும் ஊரே யாவரும் கேளீர், தீதும் நன்றும் பிறர் தர வாரா, அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள். அவரவர் வாழ்க்கையை அவர்களது மனம்போல் நன்றாக வாழுங்கள். மற்றவர்களையும் அவர்களது மனம் போல் வாழ விடுங்கள். யார் மனதையும் புண்படுத்தாதீர்கள். பழிக்காதீர்கள்.
விமர்சிக்காதீர்கள்: உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்யாதீர்கள். உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். 'ஒரு பக்க சொல் ஒரு யானை பலம்'. எல்லோரையும் வாழ்த்துங்கள். பிடிக்கவில்லை என்றால் இழிவாக மட்டும் பேசாதீர்கள். அது ஒருநாள் உங்களுக்கே திரும்பிவிடும். எண்ணம்போல்தான் வாழ்க்கை. நன்றாக யோசியுங்கள். சிந்தனையை செயல்படுத்துங்கள்.
கோடான கோடி நன்றிகள்: இந்த உலகத்தை நீங்களும் வெல்லலாம். முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை. வாழுங்கள்..! வாழ விடுங்கள்..!. நான் இங்கு போடுகிற ஒவ்வொரு பதிவும் எனது திரையுலகின் நடிப்பையும், நிஜ வாழ்க்கையை பார்த்து ரசிப்பவர்களுக்கும், நேசிப்பவர்களுக்காக மட்டும்தான். எங்களிடம் அன்பை சுவாசிப்பவர்களுக்கு மட்டும்தான். அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











