ஜப்பானில் திருமணம்.. இர்பானுக்கு அழைப்பிதழ் கொடுத்த நெப்போலியன்.. பத்திரிக்கையோடு வந்த கிஃப்ட்!
சென்னை: தமிழ் திரை உலகில் ஒரு மாஸ் வில்லனாகவும், ஹீரோவாகவும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் நெப்போலியன், தனது மூத்த மகன் தனுஷ் திருமணத்தை தடபுடலாக நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்காக பத்திரிக்கை கொடுக்கும் வேலையில் மும்முரமாக இருக்கும் நெப்போலியன், யூடியூபர் இர்பான் வீட்டுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
90கால கட்டத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். பாரதிராஜாவின் புதுநெல்லு புதுநாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த சீவலப்பேரி பாண்டி என்ற படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதைத் தொடர்ந்த பல வெற்றிப்படத்தில் நடித்த இவர், நடிகராக மட்டும் இல்லாமல்,திமுகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

நடிகர் நெப்போலியன்: நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் நான்கு வயதாக இருக்கும் போது, தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். அவரால் நிற்கவோ, நடக்கவோ முடியாது. இதற்காக திருநெல்வேலியில் இயற்கை முறையில் சிகிச்சை கொடுத்து வந்தார். அதனால், எந்த பயனும் ஏற்படவில்லை. இதையடுத்து, தன் மகனைப் போல வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக திருநெல்வேலியில் மயோபதி என்ற பெயரில் பிரம்மாண்டமான மருத்துவமனை ஒன்றை கட்டினார்.

நிச்சயதார்த்தம்: மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்ற அவர் நாளடைவில் இங்கே செட்டிலாகி விட்டார். அங்கு, ஐடி கம்பெனி ஒன்றை நிர்வகித்து வருவதோடு, 3000 ஏக்கரில் விவசாய பண்ணை ஒன்றையும் நடத்தி வருகிறார். தற்போது இவரது மகன் தனுஷூக்கு 25 வயதானதை அடுத்து, கடந்த மாதம் திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகாந்தர் என்பவரின் மகள் அக்ஷயா என்பவருடன் நிச்சயம் நடந்தது. தனுஷால் விமானத்தில் பயணம் செய்து இந்தியா வரமுடியாததால் வீடியோ கால் மூலம் நிச்சயம் நடந்தது. விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் நெப்போலியன் பத்திரிக்கை வைக்கும் பணியில் மும்முரமாக உள்ளார்.

ஜப்பானில் திருமணம்: இந்நிலையில் யூடியூப் இர்பான் வீட்டுக்கு சென்ற நெப்போலியன் மற்றும் அவரது மனைவி ஜெயசுதா திருமண அழைப்பிதழை கொடுத்தனர். இந்த வீடியோவை இர்பான் தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். அதில், நெப்போலியன் மகனின் திருமணம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மன்னர் காலத்து ஓலைச்சுவடி போல இருந்த பத்திரிக்கை தங்க நிறத்தால் ஜொலி ஜொலித்தது. மேலும் இத்துடன் வெள்ளிக்கின்னம் ஒன்றும், முத்திரி, பாதம், பிஸ்தா அடங்கிய பாக்ஸ் ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளனர். நெப்போலியன் மகன் திருமணம் எங்கு நடக்கப்போகிறது என்று பலவிதமான வதந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது ஜப்பானில் திருமணம் நடப்பது உறுதியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











