நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நலவாரியம் மூலம் உதவணும்... தமிழக முதல்வருக்கு நடிகர் நாசர் கோரிக்கை!
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு, திரைப்படத்துறை நல வாரியம் மூலம் உதவி செய்ய பரிந்துரைக்க வேண்டும் என்று நடிகர் நாசர், முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர்.

இதனால் மக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், நடிகரும் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்தில், திரைப்படங்களில் நடிக்கும் துணை நடிகர், நடிகையர்கள் சுமார் 1500 உறுப்பினர்களும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலுள்ள நாடக கலைஞர்கள் சுமார் 2000-க்கும் மேற்பட்டவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்துள்ளது. இதனால் திரைப்பட படப்பிடிப்புகளும் மாவட்டங்களில் நடைபெற இருந்த நாடக விழாக்களும் நடைபெறாமல் போனதால் அதையே நம்பி இருக்கும் அன்றாடம் ஊதியம் பெறும் திரைப்படம் / நாடகம் ஆகிய துறைகளில் உள்ள கலைஞர்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள நலிந்த கலைஞர்கள் உட்பட அனைவரும் தங்கள் அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தாங்கள் இதனை கருத்திற்கொண்டு, தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு திரைப்படத்துறை நல வாரியம் மூலம் உதவி செய்ய பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











