கோமாவிலும் மறக்காத பெயர்.. நடிகர் நாசரின் மகன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்!
சென்னை: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் நடிகர் நாசரின் மகன் நூருல் ஹசன் ஃபைசல் உறுப்பினராக சேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளார். சைவம் திரைப்படத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் பணியாற்றிய ஃபைசல், நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த மாதம் விஜய் தொடங்கினார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்து செயல்பட்டு வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக மகளிர் தலைமையில் புதிய அணியை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் உருவாக்கி உள்ளார். உறுப்பினர் சேர்க்கைக்காக செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன்மூலம் உறுப்பினர் சேர்க்கை கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. அதன்படி மூன்றே நாட்களில் சுமார் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக அந்த அணியினர் தெரிவித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று ஏற்கெனவே நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியிருந்தது. இதற்காக நிர்வாகிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

நடிகர் நாசரின் மகன்: இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும், நடிகருமான நாசரின் மகன் நூருல் ஹசன் ஃபைசல் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இவர், சைவம் திரைப்படத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் பணியாற்றி உள்ளார். நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான இவர், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளதை, நாசர் மனைவி கமீலா நாசர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
கோமாவிலும் மறக்காத பெயர்: நூருல் ஹசன் ஃபைசல் கடந்த 2014-ம் ஆண்டு சென்னை ஈசிஆரில் நடந்த கார் விபத்தில் சிக்கி கோமாவில் இருந்துள்ளார். அப்போது விஜய் என்று முணுமுணுத்துள்ளார். ஃபைசலுக்கு விஜய்யின் டான்ஸ், நடிப்பு அவ்வளவு பிடிக்குமாம். எப்போதும் விஜய் பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டே இருப்பாராம். உடனே நாசர் விஜய்க்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்ல, இதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த விஜய், தான் இப்போது வெளியூரில் படப்பிடிப்பில் இருப்பதாகவும், வந்தவுடன் பார்ப்பதாக கூறி, ஊரில் இருந்து வந்ததும், நாசர் வீட்டிற்கு சென்று நாசரின் மகனை பார்த்துள்ளார். அதன் பிறகு ஒரு வழியாக கோமாவில் இருந்து திரும்பிய நாசரின் மகனை பார்ப்பதற்காக விஜய் அடிக்கடி சென்று வந்தாராம். இந்த தகவலை நாசர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











