Nepoleon: எங்க மருமக தான் எங்க குலசாமி.. நெகிழ்ச்சியில் கண்கலங்கிய நெப்போலியன்!
டோக்கியோ: நடிகர் நெப்போலியன் நடிகராக மட்டுமில்லாமல் அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டவர். இவருக்கு தனுஷ், குணால் என இரு மகன்கள் உள்ள நிலையில் ஒரு கட்டத்தில் தன்னுடைய மூத்த மகன் தனுஷின் உடல்நல பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக அமெரிக்காவில் குடியேறினார். தங்களின் மகனை கண்ணை இமை காப்பது போல நெப்போலியன் -ஜெயசுதா தம்பதி காத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் ஜப்பானின் டோக்கியோவில் தனுஷிற்கும் தமிழகத்தை சேர்ந்த அக்ஷயா என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திரையுலக பிரபலங்கள் கார்த்தி, மீனா, குஷ்பூ, ராதிகா, சரத்குமார், பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் இந்த திருமணத்தில் இணைந்திருந்த நிலையில் மிகவும் விமரிசையாக இந்த திருமணம் நடந்து முடிந்துள்ளது.

நடிகர் நெப்போலியன்: நடிகர் நெப்போலியன் வில்லன், ஹீரோ, கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என தமிழ் சினிமாவில் மாஸ் காட்டியவர். தொடர்ந்து அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டு வந்த அவர், தன்னுடைய மூத்த மகனின் தசை சிதைவு நோய் காரணமாக அவரது சிகிச்சைக்காக அமெரிக்காவில் தன்னுடைய குடும்பத்தினருடன் செட்டில் ஆனார். அங்கேயே சாப்ட்வேர் பிசினசையும் துவங்கி மிகப்பெரிய பிசினஸ்மேனாக அவர் சாதித்துக் காட்டினார். இந்த பிசினசை தன்னுடைய மகன் தனுஷ் பெயரிலேயே அவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய மகனுக்கு தமிழகத்தை சேர்ந்த அக்ஷயா என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளார்.
ஜப்பானில் கல்யாணம்: கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாகவே தனுஷிற்கு தமிழகத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிகழ்வில் தனுஷ் பங்கேற்காத நிலையில், வீடியோ காலில் இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துக் கொண்டார். தொடர்ந்து நேற்றைய தினம் தனுஷ் மற்றும் அக்ஷயா திருமணம் ஜப்பானின் டோக்கியோவில் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்திற்காக கப்பல் மூலம் நெப்போலியன் மற்றும் குடும்பத்தினர் முன்னதாக ஜப்பான் சென்றனர். இதையடுத்து கடந்த சில தினங்களாக இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் மிகவும் விமரிசையாக நடத்தப்பட்டு நேற்றைய தினம் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
தலைவாழை இலை விருந்து: இந்த திருமணத்தில் நடிகர் கார்த்தி, குஷ்பூ, ராதிகா, சரத்குமார், மீனா, பாண்டியராஜன், கலா மாஸ்டர் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். அவர்கள் அனைவரையும் விமானநிலையத்திற்கே சென்று வரவேற்று மிகச்சிறப்பாக உபசரித்திருந்தார் நெப்போலியன். தமிழகமே ஜப்பானிற்கு வந்ததாக அனைவரும் பாராட்டும்வகையில் தமிழகத்தின் செட்டிநாடு உணவுவகைகள் உள்ளிட்ட அனைத்துமே வந்தவர்களுக்கு தலைவாழை இலையில் பரிமாறப்பட்டன. விருந்தோம்பலில் தமிழன் எப்போதுமே சிறந்தவன்தான் என்பதை நெப்போலியன் இதன்மூலம் நிரூபித்துள்ளார்.
மருமகதான் குலசாமி: இந்நிலையில் திருமணம் நடந்து முடிந்ததையடுத்து மேடையில் பேசிய நெப்போலியன், தன்னுடைய வீட்டிற்கு விளக்கேற்ற வரும் மருமகள், தங்களுக்கு மறு மகள்தான் என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். எவ்வளவோ பெயர், புகழ் சம்பாதித்தாலும் தன்னுடைய மகனது சூழலை தெரிந்து தங்களின் மகளை மணமுடித்துவைக்க சம்மதித்த அக்ஷயாவின் பெற்றோருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். அதேபோல தனுஷை திருமணம் செய்ய தயார் என்று கூறிய அக்ஷயா மிகப்பெரிய தியாகம் செய்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இதனிடையே, இவர்கள் எல்லாம் தங்களுக்கு காவல் காக்கும் சாமியை போன்றவர்கள் என்றும் அவர் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, அக்ஷயா தங்களது குலசாமி என்றும் அவர் கண்கலங்கியபடி பேசினார். அவர் இவ்வாறு வெளிப்படையாக பேசியது அனைவரையும் கண்கலங்க செய்தது.


Click it and Unblock the Notifications











