Paravathy: மறுபடியும் அம்மா கமிட்டிக்கு மோகன்லால் வந்தாலும் வேலை செய்யனும்.. பளிச்சுனு சொன்ன பார்வதி
கொச்சி: மலையாள சினிமா மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் ஆட்டம் காண வைத்த விஷயம் என்றால், ஹேமா கமிட்டி விவகாரம்தான். திரைத்துறையில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி அறிக்கையை கேரள முதலமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டது. இந்த ஆய்வினை ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் நடைபெற்றதால், இந்த ஆய்வு அறிக்கைக்கு ஹேமா கமிட்டி அறிக்கை என பெயர் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக அறிக்கை குறித்து தகவல்கள் எதுவும் வெளியே வரமால் இருந்தது. அதன் பின்னர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியே வந்ததால், ஒட்டுமொத்த மலையாள திரையுலகமும் அதிர்ந்தது. இதனால் மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பு கூண்டோடு ராஜினாமா செய்தது.
ஆனால் இதுவரை அம்மா அமைப்பின் பொதுக்குழுவைக் கூட்டவோ, அந்த அமைப்பை மீண்டும் நிறுவவோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அம்மா அமைப்பின் தலைவராக மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர் அவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. இவற்றுக்கெல்லாம் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பும் வாக்கு வாதத்தில் முடிந்தது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பார்வதி திருவோத்து பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, " அம்மா அமைப்பு முற்றிலுமாக கலைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகின்றது. ஆனால் இதுவரை மீண்டும் அம்மா அமைப்பினை கட்டமைக்கும் முயற்சியில் யாரும் கவனம் செலுத்தவில்லை.

பார்வதி திருவோத்து: ஒரு அமைப்பு என்பது கட்டாயம் இருக்கவேண்டும். அது திறம்பட இயங்கவேண்டும். அந்த இடத்திற்கு யார் வந்தாலும் அவர்கள் வேலை செய்ய வேண்டும். அது ஏற்கனவே அந்தப் பதவியில் இருந்தவர்கள் வந்தாலும் சரி, புதியவர்கள் வந்தாலும் சரி, அம்மா அமைப்பில் இருக்கின்றவர்கள் வேலை செய்ய வேண்டும். ஹேமா கமிட்டி வெறுமனே பரபரப்புக்கானது மட்டும் இல்லை. ஹேமா கமிட்டிக்கு சாட்சியாக ரத்தமும் சதையுமாக நாம் இருக்கின்றோம். இப்படியான நிலையில் ஹேமா கமிட்டியின் அறிக்கை மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஒரு அமைப்பு இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்" என பேசினார்.

மோகன்லால்: பார்வதி திருவோத்துவின் இந்தப் பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. குறிப்பாக அவர் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ள ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்கள் வந்தாலும் அவர்கள் அமைப்புக்காக வேலை செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது, மோகன்லால் பொறுப்புக்கு வந்தாலும் முன்புபோல் இல்லாமல், தனது பதவிக்கான பணிகளைச் செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சுரேஷ் கோபி: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகரும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி பேசுகையில்," பார்வதி பேசியது தொடர்பாக தான் விரைவில் மோகன்லாலிடம் பேசி மீண்டும் அம்மா அமைப்பினை கட்டமைக்க முயற்சிகளை மேற்கொள்கின்றேன்" எனக் கூறினார். ஹேமா கமிட்டி விவகாரம் தொடர்பாக விஷயங்கள் வெளியே வரவர பல நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக பொதுவெளியில் கூறினர். இது பலரையும் கதிகலங்கச் செய்தது.


Click it and Unblock the Notifications











