Power star Srinivasan: என்னை மிரட்டுகிறார்கள்.. வளர்ச்சியை தடுக்க வழக்கு.. பவர் ஸ்டார் புகார்!
சென்னை: நடிகர் பவர் ஸ்டார் காமெடியனாக சில படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவந்த பவர் ஸ்டார் உடல் நலக்குறைவு காரணமாகவும் நடிப்பதில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் தேவிபட்டினத்தை சேர்ந்த முனியசாமி என்பவரிடம் விரால் பண்ணை வைக்க 15 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி ஆவண செலவுக்காக 14 லட்சத்தை கடந்த 2019ம் ஆண்டு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முனியசாமி கேட்ட நிலையில் போலி செக் கொடுத்து மோசடி செய்ததாக கூறி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து பவர் ஸ்டார் ஆஜராகாத நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் நீதிமன்றத்தில் சரணடைந்த பவர் ஸ்டார் சீனிவாசன் தன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த வழக்கை சுமூகமாக தீர்க்க தான் விரும்புவதாகவும் ஆனால் தன்னை தொடர்ந்து எதிர் தரப்பினர் மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த 14 லட்சம் என்பது தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பேட்டியின்போது மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டார் பவர் ஸ்டார்.

செக் மோசடி வழக்கு: இந்த வழக்கில் பலமுறை ஆஜராக உத்தரவிடப்படும் ஆஜராகாமல் இருந்த பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு கடந்த டிசம்பரில் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைய எடுத்து இன்றைய தினம் ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான பவர்ஸ்டார் தன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்ய நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு பெண்மணி மூலமாகத்தான் முனியசாமி தனக்கு அறிமுகம் ஆனதாகவும் தங்கள் இருவருக்கும் இடையில் சுமூகமான உறவே இருந்த நிலையில் அவர் திடீரென நீதிமன்றத்தில் தன் மீது வழக்கு பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பொய் வழக்கு என புகார்: தன் உடல்நிலை பிரச்சனையால் தன்னால் அடுத்தடுத்த விசாரணைகளில் ஆஜராக முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து தான் நீதிபதி முன்னிலையில் விளக்கம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் இதற்கான வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என்றும் பவர் ஸ்டார் தெரிவித்துள்ளார். இது தன்மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கில் தான் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது உண்மையல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது தன் உடல் நலம் தேறியுள்ளதால் இன்றைய தினம் நீதிமன்றத்தின் ஆஜராகி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டு: நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கும் நிலையில் சாதாரண வழக்கிற்காக தன்னை மற்றவர்கள் நோகடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார், தான் மற்றவர்களை சிரிக்க வைத்து வரும் நிலையில் தன் மீது ஏன் பொய் பிரச்சாரங்களை திணிக்கிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வழக்கில் தான் செட்டில்மெண்ட்டிற்கு தயாராக உள்ளதாகவும் ஆனால் இந்த வழக்கில் தன்னை அலைகழித்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய வளர்ச்சியை கெடுப்பதற்காகவே இத்தகைய வழக்குகள் தன் மீது போடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த படங்களில் ஹீரோ: வழக்கு விசாரணையில் உள்ளதால் இந்த வழக்கு குறித்து மேலும் தன்னால் பேச முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னை இது போன்று அவமானப்படுத்தியவர்கள் மீது நான் கண்டிப்பாக மான நஷ்ட வழக்கு போட உள்ளதாகவும் பவர் ஸ்டார் தெரிவித்துள்ளார். தான் அடுத்தடுத்து தகிடுதத்தம், பிக்கப் மற்றும் முருங்கைக்காய் என மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து வருவதாகவும் இன்னும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் பவர்ஸ்டார் தெரிவித்துள்ளார். அதனால் இந்த 14 லட்சம் என்பது தனக்கு ஒரு பொருட்டு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











