Salaar first single: நாளை வெளியாகும் சலார் பட பர்ஸ்ட் சிங்கிள்.. 5 மொழிகளில் வெளியாவதாக அறிவிப்பு!
சென்னை: இயக்குநர் பிரஷாந்த் நீல் -பிரபாஸ் கூட்டணியில் உருவாகியுள்ளது சலார் படம். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்தப் படம் வரும் 22ம் தேதி பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்திற்கான பிரமோஷன்கள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் நாளைய தினம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுளளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சலார் படம்: இயக்குநர் பிரஷாந்த் நீல் கேஜிஎப் படங்களின்மூலம் சர்வதேச அளவில் சிறப்பான இயக்குநராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். அடுத்ததாக அவர் கேஜிஎப் 3 படத்தையும் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கேஜிஎப் படங்களை தொடர்ந்து பிரஷாந்த் நீல் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. இதனிடையே நடிகர் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள சலார் படம் வரும் 22ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
டிசம்பர் 22ல் ரிலீஸ்: முன்னதாகவே இந்தப் படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தை முழுமையாக்க காலஅவகாசம் தேவைப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக முன்னதாக 22ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தையும் ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ள நிலையில் கேஜிஎப் போல இந்தப்படமும் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
நட்பை கதைக்களமாக்கிய பிரஷாந்த் நீல்: இந்தப்படத்தில் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜின் நட்பை பிரதானமாக வைத்து பிரஷாந்த் நீல் கதைக்களத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதற்கேற்ப முன்னதாக வெளியான படத்தின் டிரைலரில் இதையொட்டிய காட்சிகள் காணப்பட்டன. மேலும் அந்த ட்ரெயிலரில் கேஜிஎப் படங்களை நினைவூட்டும் வகையில் காட்சிகள் காணப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. எது எப்படியோ இன்னும் சில தினங்களில் சலார் ரசிகர்களிடையே எத்தகைய தாக்கத்தை உருவாக்கும் என்பது தெரியவரும்.
சலார் படத்திற்கு ஏ சான்றிதழ்: படத்தின் சென்சார் நிறைவடைந்து படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ரன்டைமும் 2 மணிநேரம் 55 நிமிடங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளைய தினம் வெளியாகவுள்ளதாக ஹம்பாலே நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் ஒரேயொரு பாடல்தான் இடம்பெற்றுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில் அந்தப் பாடல் நாளைய தினம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பான் இந்தியா படம்: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் சலார் படம் வெளியாகவுள்ள நிலையில் நாளைய தினம் இந்த 5 மொழிகளிலும் ஒரேநேரத்தில் பாடல்கள் வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இந்தப் பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் ஆகாச சூரியன் என இந்தப் பாடல் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











