விஜய் அடிச்சு நிமித்திட்டு இருக்காரு.. ஆண்டவன் அருள் இருக்கு.. நான் கூட நிற்கிறேன்.. பிரபு பளிச்
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தனது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதில் அவருக்கு வரவேற்பு எதிர்ப்பு என இரண்டுமே கிடைத்து வருகிறது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களை அறிவித்த தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் எடப்பாடி தொகுதியில் வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் தமிழக வெற்றி கழகம் தற்போது 233 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுகிறது. இந்நிலையில் நடிகர் பிரபு விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியதுமே பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக திரைத்துறையில் இருந்து பலரும் அவரை வாழ்த்தினர். திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருவது என்பது தமிழ்நாட்டில் புதிய விஷயம் இல்லை என்றாலும், விஜய் போன்ற முன்னணி நடிகர் அரசியல் கட்சி தொடங்கி ஏற்கனவே அரசியலில் ஜாம்பவான்களாக உள்ள திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்வது என்பது சவாலான விஷயம் தான்.
விஜய் பிரச்சாரத்திற்காக எங்கு சென்றாலும் அங்கு மக்கள் திறள் அதிகமாக கூடி விடுகிறது. அதற்குக் காரணம் அவரது ரசிகர்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு விடுகிறார்கள். விஜய் கட்சியின் மாநாடு என்று அறிவித்தால் பல லட்சக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் மாநாடு திடலில் திரண்டு விடுகிறார்கள்.

ஓட்டாக மாறுமா?: கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா என்ற கேள்வியை மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி முன் வைத்தாலும், விஜய் அது குறித்து எல்லாம் கவலைப்படாமல், தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை தனது கட்சியின் சின்னமான விசில் சின்னத்திற்கு வாக்கு செலுத்த தயார் செய்து வருகிறார், சில சர்ச்சைக்குரிய வேட்பாளர்கள் அவரது கட்சியில் இருந்தாலும், பலரும் கூறுவது விஜய்யால் தமிழ்நாடு அரசியலில் மாற்றம் ஏற்படும், அதனால் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பிரபு ஆதரவு: இப்படி இருக்கையில் நடிகர் பிரபு விஜய் குறித்து கூறியுள்ள தகவல் பலர் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது இது ஜனநாயக நாடு, தம்பி விஜய் அடித்து நிமித்தீட்டு இருக்காரு. அவருக்கு அந்த ஆண்டவன் அருளும் என்னுடைய ஆசீர்வாதமும் எப்போதும் இருக்கும். நான் அவருக்கு ஆதரவாக இருக்கிறேன். திரைத்துறையில் மற்றவர்கள் ஆதரவாக இருக்கிறார்களா இல்லையா என்பது அவர்களிடம் தான் நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். தம்பி விஜய் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவராக இருக்கக்கூடிய பிரபு இவ்வாறு தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications