உனக்கு அவ்வளவு தான் புரிஞ்சுதாடா.. நீ தானா அவன்? ஜெய்பீம் சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த பிரகாஷ் ராஜ்!
சென்னை: ஜெய்பீம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியான பிரகாஷ் ராஜ் சேட் ஒருவரை அறையும் காட்சிக்கு எதிராக சிலர் கொதித்தெழுந்தனர்.
அது எப்படி இந்தி பேசும் ஒருவரை தமிழில் பேசு என பிரகாஷ் ராஜ் அறையலாம் என நடிகர் பிரகாஷ் ராஜே அந்த சீனை வைத்தது போல அவர் மீது கோபத்தை கொட்டினர்.
இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ஸ்டைலில் பக்காவான பதிலடி கொடுத்துள்ளார்.

தீபாவளி வின்னர்
இந்த தீபாவளி பண்டிகைக்கு வசூல் ரீதியாக அண்ணாத்த படம் ஹிட் அடித்தாலும் மக்கள் மனதில் வெற்றி பெற்றது ஜெய்பீம் திரைப்படம் தான். அண்ணாத்த, எனிமி, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் ஹாலிவுட் படமான இட்டர்னல்ஸ் என அனைத்தையும் விமர்சன ரீதியாக ஜெய்பீம் திரைப்படம் ஓவர் டேக் செய்துள்ளது.

சூர்யாவுக்கு பாராட்டு
நீதியரசர் சந்துரு 90களில் இருளர் இனத்தை சேர்ந்த ராஜாகண்ணு என்பவருக்கு நடந்த அநீதியை எதிர்த்து தொடர்ந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் தா.செ. ஞானவேல் சில புனைவுகளுடன் சொன்ன கதைக்கு ஓகே சொல்லி நடிகர் சூர்யா தயாரித்து நடித்துக் கொடுத்த ஜெய்பீம் திரைப்படம் அடிதட்டு மக்களின் உணர்ச்சியை உலகுக்கு சொல்லும் விதமாக உள்ளது என்றும் இன்றளவும் லாக்கப் டெத் சம்பவங்கள் நடப்பதால் இந்த நிலை மாற வேண்டும் என்கிற குரல்களுடன் ஏகப்பட்ட பேர் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

எப்படி அறையலாம்
இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் இந்தி பேசும் சேட்டை பிரகாஷ் ராஜ் எப்படி அறையலாம் என்றும் இந்தி திணிப்புக்கு எதிரான பிரச்சாரமாக அந்த காட்சி வைக்கப்பட்டுள்ளது என்றும் நடிகர் பிரகாஷ் ராஜின் இந்தி வெறுப்பு அரசியல் தான் இதன்மூலம் தெரிகிறது என்றும் சிலர் திட்டத் தொடங்கினர்.

ரசிகர்கள் விளக்கம்
இந்தி திணிப்புக்கு எதிராகவோ அல்லது இந்தி வெறுப்பு அரசியலோ அந்த காட்சியில் இடம்பெறவில்லை என்றும் கதைப்படி திருட்டு நகையை வாங்கிய சேட் ஒருவர் தப்பிக்க இந்தியில் பேசுவதை அறிந்த போலீசார் தமிழில் பேசு என்றே மிரட்டும் தொனியில் அறைந்தார் என்று ரசிகர்களே அந்த காட்சிக்கு விளக்கம் அளித்து பிரகாஷ் ராஜுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜே அந்த காட்சி குறித்த விளக்கத்தை அளித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் பதிலடி
இதுதொடர்பான கேள்விக்கு சமீபத்தில் ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த படத்தில் பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக சந்தித்து வரும் உண்மையான பிரச்சனையை பற்றி தைரியமாக பேசியுள்ளனர். அடிதட்டு மக்களின் துயர நிலை அவர்கள் படும் துன்பங்கள் எதுவுமே இவர்கள் கண்களுக்கு படவில்லை அந்த ஒற்றை அறை தான் தெரிகிறது என்கிற போதே அவர்களின் நிலைப்பாடு புரிகிறது என பதிலடி கொடுத்துள்ளார்.

உனக்கு அவ்வளவுதான் புரிஞ்சுதாடா
இந்தி எதிர்ப்பு அரசியல் அந்த காட்சியில் இல்லை என்றும் இந்த படம் 90களில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஒருவேளை அப்போது இந்தி திணிப்பால் அந்த போலீசார் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர் அந்த நோக்கத்தில் கூட பேசியிருக்கலாம் என பேசிய பிரகாஷ் ராஜ் சற்றே ஆவேசமடைந்து "உனக்கு அவ்வளவுதான் புரிஞ்சுதாடா.. நீ தானா அவன்" என்றும் கேட்டுள்ளார்.

வரலாற்றை திரிக்காதீங்க
ஜெய்பீம் திரைப்படத்திற்கு எந்த அளவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறதோ அதேபோல சில தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன. உண்மை கதை என்று சொல்லிவிட்டு சில இடங்களில் சில வரலாற்று திரிப்புகளை படக்குழு வேண்டுமென்றே செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்ட இனத்தை குறிக்கும் காலண்டர் லாக்கப் டெத் செய்த எஸ்.ஐ. வீட்டில் இருந்தது பற்றியும் சர்ச்சைகள் கிளம்பின. அந்த கேலண்டரையும் தற்போது படக்குழு மாற்றி உள்ளது.


Click it and Unblock the Notifications











