Prasanth: நல்ல மனசு சார் உங்களுக்கு.. மாற்றுத்திறனாளிகளுடன் அந்தகன் படம் பார்த்த பிரசாந்த்!
சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில், அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் அந்தகன். இந்தப் படம் பிரசாந்த்தின் 50வது படம். இந்தப் படம் ஹிந்தியில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான அந்தாதுன் படத்தின் ரீமேக் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக இந்தப் படம் ரிலீஸாகவுள்ளது என கூறப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸ் ஆனது. தொடக்கத்தில் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அதன் பின்னர் ஆகஸ்ட் 9ஆம் தேதியே படம் ரிலீஸ் என சொல்லப்பட்டு அந்தகன் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஹிந்தியில் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தப் படம் அந்தாதுன். அந்தப் படத்தின் தமிழ் ரிமேக் என்றவுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல், படத்தினைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் தொடங்கி விமர்சகர்கள் வரை அனைவரும் படத்தினை பாராட்டினர். குறிப்பாக படத்தினைப் பார்த்த ரசிகர்கள் படம் மிகவும் நன்றாக இருப்பதாகவும், படத்தில் சிம்ரனின் நடிப்பு மிகவும் பிரமாதமாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

படத்தினை ரசிகர்களுடன் நடிகர் பிரசாந்த் மற்றும் படக்குழுவினர் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் படம் பார்த்தனர். நடிகர் பிரசாந்த் மற்றும் அந்தகன் படக்குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது. படம் பார்க்க வந்த ரசிகர்கள் அந்தகன் படத்தின் பேனருக்கு பாலபிஷேகம் செய்தனர். மேலும் தியேட்டர் வாசலில் 1000 வாலா வெடி வைத்து கொண்டாடினர். அதேபோல் ட்ரம்ஸ் வாசித்து ஆட்டம் ஆடினர்.

பியானோ கலைஞர்: இந்த படத்தின் கதாநாயகன் ஒரு பியானோ கலைஞர் மற்றும் பார்வை மாற்றுத்திறனாளி. பிரசாந்த் சிறுவயதிலேயே பியானோ முறைப்படி கற்றுத் தேர்ந்தவர். இதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று படித்துள்ளார். இதனால் அந்தாதுன் படத்தின் கதையில் பிரசாந்த் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என நினைத்ததால்தான் அந்தப் படத்தின் உரிமைகளை வாங்கியதாக, படம் ரிலீஸ்க்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தியாகராஜன் கூறியிருந்தார்.

படக்குழு: மேலும் படத்தில் பிரசாந்த் உடன், சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக் கனி, யோகி பாபு, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தினை நடிகர் பிரசாந்த் சென்னையில் உள்ள திரையரங்கில் மாற்றுத் திறனாளிகளுடன் அமர்ந்து பார்த்தார். மேலும், படத்தில் பிரசாந்த் பார்வை மாற்றுத் திறனாளியாக நடித்திருந்தார். இதனால்தான் படக்குழு தரப்பில் இருந்து மாற்றுத் திறனாளிகளுடன் அமர்ந்து படம் பார்க்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள்: படத்தினை பார்வை மாற்றுத் திறனாளிகளுடன் பார்த்த நடிகர் பிரசாந்த் பேசுகையில், உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், உங்களுடன் அமர்ந்து படம் பார்ப்பதும் மகிழ்ச்சி அளிப்பதாக பேசினார். மேலும் மாற்றுத்திறனாளியாக தான் நடித்ததே மிகவும் சவலானதாக இருந்தது எனவும், அந்த வாழ்க்கையை வாழக்கூடிய உங்களை பார்க்கும்போது மிகவும் உத்வேகமாக இருப்பதாகவும் பேசினார்.
பாராட்டு: படம் பார்த்த மாற்றுத்திறனாளிகள் பேசுகையில், படம் மிகவும் நன்றாக இருந்ததாக குறிப்பிட்டனர். மேலும் பார்வை மாற்றுத் திறனாளியாக இருப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். அப்படியான கதபாத்திரத்தை பிரசாந்த் தேர்வு செய்து நடித்திருப்பது மிகவும் சிறப்பு எனவும், பார்வை மாற்றுத் திறனாளியாக பிரசாந்த் சிறப்பாகவே நடித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர். அந்தகன் படக்குழுவினரின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











