Prashanth: அந்தகன் பிரமோஷனுக்காக சிக்கலில் மாட்டிய பிரசாந்த்.. அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்!
சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில் வரும் ஒன்பதாம் தேதி அந்தகன் படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி விஜய்யுடன் பிரசாந்த் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படமும் வெளியாக உள்ளது. பிரசாந்தின் அப்பா தியாகராஜன் இயக்கி தயாரித்துள்ள அந்தகன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களுக்காக பிரசாந்த் பல வகைகளில் செயல்பட்டு வருகிறார். பல பேட்டிகளை கொடுத்து வந்த அவர் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சாலையில் சென்றபடிவித்தியாசமான முயற்சியாக பைக்கிலேயே பேட்டி அளித்திருந்தார். அவருக்கு பின்னால் தொகுப்பாளினியும் ஹெல்மெட் அணியாமல் பேட்டி எடுத்திருந்தார். இது குறித்த கண்டனங்கள் எழுந்தநிலையில் பிரசாந்த் மற்றும் அந்த தொகுப்பாளினிக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

நடிகர் பிரசாந்த்: நடிகர் பிரசாந்த் தற்போது ரீஎன்ட்ரிக்கு சிறப்பாகவே தயாராகி வருகிறார். நீண்ட காலங்களாக ரிலீசாகாமல் தவித்துவந்த அவரது அந்தகன் படம் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் ரீமேக்காக அந்தகன் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரசாந்துடன் பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரகனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரசாந்தின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான தியாகராஜன் இந்த படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இந்த படம் துவங்கிய காலத்தில் இருந்தே கொரோனா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. இதனால் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போனது.
அந்தகன் படம்: இந்நிலையில் ஒரு வழியாக இந்த படம் வரும் 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு வாரம் முன்னதாகவே படம் வெளியாகவுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி தங்கலான், டிமாண்டி காலனி 2, ரகு தாத்தா உள்ளிட்ட படங்கள் ரிலீசாகவுள்ளதால் அந்தகன் படத்தை முன்னதாகவே ரிலீஸ் செய்ய பிரசாந்த் முடிவெடுத்து அறிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரசாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள அந்தகன் படத்தை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்தகன் பட பிரமோஷன்கள்: இந்தப் படத்தின் பிரமோஷன்களில் பிரசாந்த் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டிகளை கொடுத்து வரும் அவர், முன்னதாக கார் ஓட்டியபடி பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது பைக் ஓட்டியபடி ஒரு பேட்டியை அவர் கொடுத்துள்ளார். இந்த பேட்டியின் போது ஹெல்மெட் அணியாமல் பிரசாந்த் பாண்டிபஜார் சாலைகளில் ரசிகர்களுக்கு கைகாட்டிய படி சென்றிருந்தார். அவருக்கு பின்னால் இருந்த ஆங்கரும் பைக் பின்னால் ஹெல்மெட் இல்லாமல் உட்கார்ந்து கொண்டு பேட்டி எடுத்ததையும் பார்க்க முடிந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அடுத்தடுத்து கண்டனங்கள் எழுந்தன. சாதாரண மக்களுக்கு மட்டும்தான் விதிமுறைகளா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
பிரசாந்திற்கு அபராதம்: இந்நிலையில் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்ற நடிகர் பிரசாந்துக்கு பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். கூடவே பின்னால் ஹெல்மெட் அணியாமல் உட்கார்ந்திருந்த தொகுப்பாளினிக்கும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு பிரசாந்த் நடிப்பில் அந்தகன் படம் வெளியாகவுள்ள நிலையில், அவர் இத்தகைய சர்ச்சையில் சிக்கியுள்ளது அவரது ரசிகர்களை கவலை கொள்ள செய்துள்ளது.
பிரசாந்த் விளக்கம்: முன்னதாக பேட்டிக்காக மட்டுமே தான் ஹெல்மெட் போடவில்லை என்றும் ஹெல்மெட் போட்டுக் கொண்டு பேட்டி கொடுத்தால் சரியாக கேட்காது என்பதே காரணம் என்றும் பிரசாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்ட வேண்டாம் என்றும் பாதுகாப்பே முக்கியம் என்றும் பிரஷாந்த் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











