அப்பா கங்கை அமரன் பேசியது தப்பு.. தல அஜித்தால் தான் GBU படம் ஓடுச்சு.. பிரேம்ஜி பளீச்!
சென்னை: அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் வணிக ரீதியாக வெற்றிப் படமாக மாறியுள்ள நிலையில், தல அஜித் மாஸ் கம்பேக் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதற்கிடையில் படத்தில் பயன்படுத்தப்பட்ட இளையராஜாவின் பாடல்களால் தான் குட் பேட் அக்லி படம் வெற்றிப் படமாக மாறியுள்ளது என கங்கை அமரன் தெரிவித்திருந்த நிலையில், நடிகர் பிரேம்ஜி அஜித்தால் தான் குட் பேட் அக்லி படம் வெற்றி பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய படம் குட் பேட் அக்லி. படத்தில் அஜித், த்ரிஷா, பிரபு, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சிம்ரன், பிரியா வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி இதுவரை உலக அளவில் ரூபாய் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குட் பேட் அக்லி படம் இதுவரை இந்தியாவில் சுமார் 165 கோடிகளும், வெளிநாடுகளில் சுமார் 63 கோடிகளும் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறன. இந்த படம் அஜித்திற்கு மாஸான கம் பேக் படம் என்றே கூறலாம். காரணம், அஜித்தின் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி வெளியான விடாமுயற்சி படம் வணிக ரீதியாக மிகப்பெரிய தோல்விப் படமாக மாறியது. இதனால் அஜித்தை பலரும் கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் வெளியானது.
இப்படியான நிலையில்தான் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. இந்த படத்தின் டீசரே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால், படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியது. படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் ஹிட்டை கிட்டத்தட்ட உறுதி செய்தது. அதற்கு முன்னர் வெளியான பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. டிரைலரில், இடம் பெற்ற பாடலான ஒத்த ரூபாயும் தாரேன் பாடல் டிரைலரின் தரத்தை உயர்த்திக் காட்டியது. மேலும் டிரைலரை தொடர்ந்து பார்க்கவும் காரணமாக அமைந்தது.
படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. காரணம் படத்தில் அஜித்தின் மாஸான ஹிட் படங்களின் ரெபரன்ஸ்கள் இடம் பெற்றது. இது ரசிகர்கள் படத்தைக் கொண்டாட முக்கிய காரணமாக அமைந்தது. படத்தின் முதல் பாதி கொஞ்சம் சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதி மொத்த படத்தையும் வேற லெவலுக்கு எலிவேட் செய்தது. இந்த படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக, தீவிர அஜித் ரசிகரான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம். ஆதிக் ரவிச்சந்திரன் சொன்னதைப்போல், இந்த படத்தில் ஃபேன் பாய் சம்பவம் செய்துவிட்டார் என அவரது ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரனை இப்போது வரை பாராட்டி வருகிறார்கள்.

குட் பேட் அக்லி படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான பாடல்களான, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி, இளமை இதோ இதோ ஆகிய பாடல்கள் இடம் பெற்றிருந்தன. இந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. குறிப்பாக இந்த பாடல்கள் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த இடம், அவற்றை காட்சிப்படுத்திய விதம் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த பாடல்கள் இடம் பெற்ற இடங்களில் அப்லாஸ்கள் அள்ளியது.

இளையராஜா: படம் வெளியான பின்னர் இசைஞானி இளையராஜா தரப்பில் இருந்து படக்குழுவினருக்கு முறையான அனுமதி இல்லாமல், தனது பாடல்கள் பயன்படுத்தப்பட்டு விட்டதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில், நஷ்ட ஈடாக ரூபாய் 5 கோடிகள் தர வேண்டும் எனவும் இல்லை என்றால், வழக்கு தொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இசைஞானி இளையராஜாவிடம் முறையான அனுமதி வாங்காமல் அவரது பாடல்களைப் பயன்படுத்தினால், அவர்களுக்கு இளையராஜா தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் செல்வது வழக்கம்.
கங்கை அமரன்: இவ்வாறு வக்கீல் நோட்டீஸ் செல்லும் போது, பலரும் இளையராஜாவுக்கு பணத்தாசை, அதனால்தான் இப்படி எல்லாம் பணம் கேட்கிறார் எனவும், சிலர், பாடல்களின் மொத்த உரிமையும் தயாரிப்பாளுருக்குத்தான் சொந்தம், இளையராஜா பணம் வாங்கிக் கொண்டுதான் இசையமைத்துக் கொடுத்தார். அப்படி பார்த்தால் தயாரிப்பாளருக்கு தானே சொந்தம் என பேசுபவர்களும் உள்ளார்கள். இப்படியான நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் பேசும்போது, இளையராஜா மீதான விமர்சனங்களுக்கு காட்டமாக பதில் அளித்தார்.

பணம்: குறிப்பாக, எங்கள் பாடலைப் போட்டால்தான் படம் ஓடுகிறது. விசில் பறக்கிறது. யாருக்கு வேண்டும் பணம். எங்களிடமே செலவு செய்ய முடியாத அளவுக்கு பணம் கொட்டிக் கிடக்கிறது. உங்கள் பணம் எங்களுக்குத் தேவையில்லை. முறையான அனுமதி வாங்கியிருந்தால், அண்ணன் (இளையராஜா) சும்மாவே கொடுத்திருப்பார். ஆனால் நீங்கள் முறையான அனுமதி வாங்காத போது தான் கோபம் வருகிறது என பேசியிருந்தார்.

பிரேம்ஜி: இப்படியான நிலையில், கங்கை அமரனின் மகன் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக பேசும் போது, எனது அப்பா பேசியது, அவரது அண்ணனுக்கு ஒரு பிரச்னை எனும்போது அவரது அண்ணனுக்கு ஆதரவாக பேசியுள்ளார். நான் எனது அண்ணனுக்கு ஒரு பிரச்னை என்றால் பேசுவேன் அல்லவா? அதுபோலத்தான். அப்போது, பத்திரிகையாளர்கள் தரப்பில் இருந்து, அஜித்தின் குட் பேட் அக்லி படம் இளையராஜாவால் தான் ஓடியது என கங்கை அமரன் சொல்லி இருக்கிறாரே என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கும் போது, அதெல்லாம் சும்மா. உண்மை என்பது அனைவருக்கும் தெரியும். தல படம் தல அஜித்தால் தான் ஓடும் என பதில் அளித்தார். இவரது பேச்சு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் கங்கை அமரன் பேசியதற்கும் அவரது மகன் பிரேம்ஜி பேசியதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன எனவும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள். பிரேம்ஜி நடிப்பில் உருவாகியுள்ள வல்லமை படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











