ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு.. தவறவிட்ட பிரித்விராஜ்.. லைகா போட்ட கண்டிஷன் தான் காரணமா?
கொச்சி: நடிகர் பிரித்விராஜ் இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என அடுத்தடுத்த தளங்களில் தன்னை இணைத்து வரும் சூழலில் மோகன்லாலை வைத்து அவர் கடந்த 2019ம் ஆண்டில் லூசிஃபர் படத்தை இயக்கியிருந்தார்.இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார் எம்புரான் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று தினம் கொச்சியில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது.
எம்புரான் படம் வரும் மார்ச் 27ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றைய தினம் நடந்த டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய பிரித்விராஜ். ரஜினிகாந்தை இயக்க கிடைத்த வாய்ப்பு எப்படி கைநழுவி போனது என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

நடிகர் பிரித்விராஜ்: நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட அடுத்தடுத்த மொழிகளில் தன்னை மிக சிறப்பாக இணைத்து வருகிறார். அவரது நடிப்பில் நீண்ட கால மெனக்கடலுக்கு பிறகு வெளியான ஆடுஜீவிதம் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வசூலிலும் மாஸ் காட்டியது. இந்நிலையில் அடுத்ததாக நடிகர் மோகன்லாலுடன் இணைந்து பிரித்விராஜ் நடித்து இயக்கியுள்ள எம்புரான் படம் வரும் மார்ச் 27ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது.
எம்புரான் டீசர் வெளியீடு: இந்நிலையில் நேற்றைய தினம் கொச்சியில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. மலையாள திரையுலகமே இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றது. மோகன்லால், பிரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிலையில் மம்முட்டி, மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட மலையாள பிரபலங்களும் சிறப்பு விருந்தினராக விடாமுயற்சி பட இயக்குநர் மகிழ் திருமேனியும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநரும் நடிகருமான பிரித்விராஜ் பல சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்டார்.
ரஜினிகாந்தை இயக்க கிடைத்த வாய்ப்பு: தான் நடிப்பதை அனைவரும் விரும்புவதாகவும் இயக்குவதை தன்னுடைய குடும்பத்தினரே விரும்பவில்லை என்றும் அவர்களுடன் தன்னால் நேரத்தை செலவழிக்க முடியவில்லை என்பதால் அவர்கள் தான் படங்களை இயக்குவதை விரும்புவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே அடுத்தடுத்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட பிரித்விராஜ், லைகா தயாரிப்பில் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் தானும் இந்த படத்திற்காக சில கதைகளை உருவாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவில் இந்த படத்தை லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் முடிக்க வேண்டும் என்று விரும்பியதால் படத்தை தான் ஏற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
பார்ட் டைம் இயக்குநர்: பார்ட் டைம் இயக்குநராக இருக்கும் தன்னால் லைகா நிறுவனத்தின் இந்த டிமாண்டை ஏற்க முடியவில்லை என்றும் அதனால் ரஜினியை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை, தன் கையை விட்டு நழுவியதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு வளர்ந்துவரும் இயக்குநராக இது தன்னுடைய கேரியரில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்பதையும் அவர் பகிர்ந்துக் கொண்டுள்ளார். ரஜினியை இயக்க அறிமுக இயக்குநர்களில் இருந்து முன்னணி இயக்குநர்கள் வரை போட்டிப் போட்டுவரும் நிலையில், பெரிய நிறுவனத்தின்கீழ் ரஜினியை இயக்க கிடைத்த வாய்ப்பை மறுத்துள்ளார் பிரித்விராஜ்.


Click it and Unblock the Notifications











