சின்மயியை இனி காம்பவுண்டில் கூட விடமாட்டோம்... ராதா ரவி காட்டம்!
சென்னை: தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 17ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் தலைவர் பதவிக்கு ராதா ரவி போட்டியிட உள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராதா ரவி, டப்பிங் யூனியனுக்கு சந்தா கட்டாத சின்மயியை யூனியன் காம்பவுண்டில் விட மாட்டோம் என்று பேசி உள்ளார்.
மார்ச் 17 ஆம் தேதி தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நடிகர் ராதா ரவி, இந்த முறை டப்பிங் யூனியன் தேர்தலில் தலைவராக போட்டியிடுகிறார். இதுகுறித்து,செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் பேசிய ராதா ரவி, இந்த முறையும் தலைவராக நான் போட்டியிடுகிறேன் என்றார். இதில் மொத்தம் 1645 வாக்குகள் இருக்கிறது. இதுக்கே இந்த போராட்டம் என்றால், ஓட்டு எண்ணிக்கை அதிகமானால் இன்னும் போராட்டம் அதிகமாக இருக்கும். போராட்ட காலங்களில் ஒதுங்கி விடாமல் அதை எதிர்த்துதான் நிற்க வேண்டும்.

எனக்கு வேறு எந்த வருத்தமும் இல்லை. எதிரிகளை பார்த்திருக்கிறேன். ஆனால் துரோகிகளை இந்த தேர்தலில் தான் பார்க்கிறேன். அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் நிற்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு யூனியன் என்றால், என்னென்ன செய்யப் போகிறோம் என்று சொல்ல வேண்டும். நான் தைரியமாக தன்னம்பிக்கையோடு இருக்கிறேன். நிச்சயமாக நம் அணி பெரிய அளவில் வெற்றி பெறும் என்றார்.
இதையடுத்து செய்தியாளர் ஒருவர், லியோ படத்தில் சின்மயி டப்பிங் பேசிய விவகாரம் குறித்த கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், சின்மயியை டப்பிங் கொடுக்க வைத்ததற்கான அபராதத்தை லோகேஷ் கனகராஜ் தான் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. டப்பிங் யூனியனின் விதிமுறைகள் குறித்து அவருக்கும் நன்றாக தெரியாது. இந்த விவகாரம் குறித்து, நான் போன் பண்ணி கேட்டதும், லோகேஷ் ஒப்புக் கொண்டார். அபராதத்தொகை யூனியனுக்கு வந்துவிட்டது அதுபோதும் என்றார்.
இதைத்தொடர்ந்து மற்றொரு செய்தியாளர், சின்மயியை மீண்டும் யூனியனில் சேர்த்துக்கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராதா ரவி, சின்மயியை நாங்கள் வெளியே அனுப்பவில்லை. ஒவ்வொரு வருடமும் சந்தா கட்ட வேண்டும். கட்டவில்லை என்றால் மெம்பர்ஷிப் காலாவதியாகிவிடும். சந்தா கட்டாததால் தனது உரிமையை அவரே இழந்து விட்டார். சின்மயி மீண்டும் வந்தால் சங்கத்தின் கட்டிடத்திற்கு வெளியில் வேண்டுமானால் நிற்கட்டும். ஆனால், நிச்சயமாக அந்த காம்பவுண்டில் கூட சேர்க்க மாட்டோம் என்று காட்டமாக பதிலளித்தார் ராதா ரவி.


Click it and Unblock the Notifications











