ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுக்க ஆசைப்படுறீங்க.. இதை பாக்க மாட்டீங்களா.. ஷங்கரை சாடிய பிரபல நடிகர்!
சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேற்று முன்தினம் இரவு லைட்டுகள் அமைக்கப்பட்டிருந்த கிரேன் சரிந்து விழுந்தது. இதில் உதவி இயக்குநர் கிருஷ்ணா புரடெக்ஷன் உதவியாளர் மது, கலை உதவியாளர் சந்திரன் ஆகியோர் மரணமடைந்தனர்.
இந்த சம்பவம் தமிழ்த் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திரை பிரபலங்கள் பலரும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ராதாரவி
இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட தொழிலாளர் சம்மேளமான ஃபெப்சியில் இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் டப்பிங் யூனியன் தலைவரும் நடிகருமான ராதாரவி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

இனிமையானவர்
அப்போது பேசிய நடிகர் ராதாரவி, விபத்தில் மரணமடைந்த சந்திரனுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் சந்திரன் பார்ப்பதற்கு கரடு முரடாக இருப்பார். ஆனார் பழக மிகவும் இனிமையானவர். பலாப்பழத்தை போன்றவர் சந்திரன். அவரது இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது.

பாராட்டு
இது சாதாரணமாக சொல்வதில்லை. மனதில் இருந்து சொல்கிறேன் என்றார். மேலும் மது, மற்றும் கிருஷ்ணாவின் மறைவுக்கும் ராதாரவி இரங்கல் தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் ஒரு கோடி ரூபாய் நிதி அறிவித்ததற்கு நடிகர் ராதா ரவி பாராட்டு தெரிவித்தார்.

ஷங்கர் மீது சாடல்
மேலும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதில்லை என இயக்குநர் ஷங்கரை மறைமுகமாக சாடினார் ராதாரவி. பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரை நடிகர் ராதாரவி சாடியிருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











