பெரியார் மீது மதிப்பு கொண்டவர் ரஜினி... நடிகர் ராகவா லாரன்ஸ் சப்போர்ட் ட்வீட்
சென்னை: பெரியார் மீது பெருமதிப்பு கொண்டவர் ரஜினிகாந்த் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971 ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் போது, ராமர் மற்றும் சீதை உருவப்படங்கள் நிர்வாணமாக கொண்டு வரப்பட்டதாகவும், செருப்பால் அடிக்கப் பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று பெரியார் இயக்கங்களும், திராவிட இயக்கங்களும், ரஜினிகாந்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

அவுட்லுக் இதழில்
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தான் பேசியதற்கான ஆதாரம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி உள்ள அவுட்லுக் இதழில் இடம் பெற்றுள்ளதாகக் கூறினார். எனவே, தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும் அதிரடியாகத் தெரிவித்துவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விஷயம் மேலும் சூடாகி கொண்டிருக்கக்கூடிய சூழலில் சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், ரஜினிகாந்தை விளாசித் தள்ளினார்.

அவுட்லுக் ஆதாரம்
அவர் பேசும்போது,1971இல் நடைபெறாத ஒன்றை, நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். இது மலிவான அரசியல். தேவையில்லாத ஒன்றை பேசுவதற்கு பதில் ரஜினி வாய்மூடி மவுனமாக இருக்க வேண்டும். துக்ளக் பத்திரிகையில் வந்த செய்திக்கு அவுட்லுக் பத்திரிகை எப்படி ஆதாரமாக இருக்க முடியும்? எத்தனை ரஜினிகள் வந்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
மனம் நோகும்படி
இந்நிலையில், ரஜினிகாந்துக்கு ஆதரவாக நடிகர் ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் சூப்பர் ஸ்டாரை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். ரஜினிகாந்த்தைப் பொறுத்தவரை, யார் மனதையும் நோகும்படி பேசக்கூடியவர் அல்ல. ஏன் அவரை திட்டுபவர்களைக் கூட பதிலுக்கு பதில் திருப்பித் திட்டாத பண்பாளர்.

வேலு பிரபாகரன்
எதையும் ப்ளான் செய்தோ, திட்டமிட்டோ அவதூறாகப் பேசக்கூடியவர் அல்ல. ஆனால் பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிவிட்டதாகக்
கூறுகின்றனர். அப்படி பேசக்கூடியவர் என்றால் 2006 ஆம் ஆண்டு பெரியாரின் தீவிரத் தொண்டரான இயக்குநர் வேலு பிரபாகரன், "பெரியார் கருத்துக்களை தாங்கி எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவித்தபோது, வேலுபிரபாகரனே எதிர்பாராத பெரும் தொகையை கொடுத்து,
அதைவெளியிட எதற்காக ரஜினி உதவி செய்ய வேண்டும்? பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர்தான் ரஜினி. அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











