அதை மட்டும் தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்க.. தமிழக அரசுக்கு ராகவா லாரன்ஸ் திடீர் வேண்டுகோள்!
சென்னை: தன்னார்வலர்கள் பொருட்கள் வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார், நடிகர் ராகவா லாரன்ஸ்.
Recommended Video
தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு நேரடியாக உணவு, சமையல் பொருட்கள் வழங்க தமிழக அரசு நேற்று தடை விதித்தது.
ஊரடங்கை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாராட்டுகிறேன்
இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான, தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
அதை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.
மறுபரிசீலனை
அதே நேரம், ஊரடங்கினால் சரிவர உணவுப் பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 'இனி தன்னார்வலர்களோ, தனி நபர்களோ, உணவுப் பொருட்கள் வழங்கக் கூடாது' என்று விதிக்கப்பட்டுள்ள தடையை தயவுசெய்து மறுபரிசீலனை செய்ய மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

சேவை திட்டங்கள்
ஏனெனில், அரசாங்கமே கடைநிலை பகுதி வரை அனைவருக்கும் விரைவாக உணவுப் பொருட்களைத் தந்திட இயலாது என்பதே யதார்த்தம். அதனால், ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் எனும் நல்லெண்ணத்திலேயே, கடந்த வாரம் கொரோனா தடுப்பு நிவாரண நிதி அளித்த கையோடு அடுத்த கட்டமாக, வரும் 14 ஆம் தேதி என் நண்பர்கள் மற்றும் அரசுடன் இணைந்து சில சேவை திட்டங்களைச் செயல்படுத்தத் தயாராகி வருகிறோம்.

அதிர்ச்சியாக உள்ளது
இந்நிலையில், அரசின் இந்த தடை உத்தரவு, அதிர்ச்சியாக உள்ளது. நமது அரசு இப்படிச் செய்யலாம், தன்னார்வலர்கள் மக்களுக்குப் பொருட்களை வழங்குகிற நடைமுறையில் கெடுபிடியான சட்ட நெறிமுறைகளை வகுத்து, அதை காவல்துறை துணையோடு கடைப்பிடிக்க உத்தரவிடலாம்.

உதவக் கூடாது
காய்கறி, பழங்களை இலவசமாகக் கொடுக்கக் கூட மனமில்லாமல் குப்பையில் கொட்டுகிறவர்கள் இருக்கிற இதே நாட்டில்தான், அன்பை அளவில்லாமல் கொட்டுகிற தன்னார்வலர்களும் இருக்கிறார்கள். அதனால், அவர்கள் நேரடியாக உதவக் கூடாது என்கிற உத்தரவை மட்டும் மறுபரிசீலனை செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











