இதுவரை என்னைத்தான் தவறாக பேசினார்கள், இப்பொழுது தாய் தந்தையையும்.. கதறும் நடிகர் லாரன்ஸ்!
சென்னை: இதுவரை தன்னைதான் திட்டினார்கள் தற்போது தனது தாய் தந்தையையும் தவறாக பேசுகிறார்கள் என நடிகர் ராகவா லாரன்ஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
அண்மையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டர்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் ராகவா லாரன்ஸும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், அரசியல் ரீதியாக காரசாரமாக பேசி பரபரப்பை கிளப்பினார்.

நாட்டிற்கு நல்லதல்ல
குறிப்பாக சீமான் பெயரை குறிப்பிடாமல் அவர் பேசியதை வைத்து வெளுத்து வாங்கினார். சீமான் பேசுவது நாட்டிற்கு நல்லதல்ல என்று கூறினார் லாரன்ஸ்.

நாம் தமிழர்
மேலும் எனது தலைவரை பற்றி யார் தவறாக பேசினாலும் நான் பதிலடி தருவேன் என்று கூறியிருந்தார் லாரன்ஸ். இதனால் கடுப்பான நாம் தமிழர் கட்சியினர் கடந்த 7ஆம் தேதி முதல் உண்டு இல்லை என செய்து வருகின்றனர்.

லாரன்ஸ் வேதனை
சமூக வலைதளங்களில் லாரன்ஸ் குறித்து தவறாகவும் அவதூறாகவும் பேசி வருகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார் லாரன்ஸ். இந்நிலையில் இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மிகுந்த வேதனையுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

எனது தாய் தந்தையையும்..
அதில் தெரிவித்திருப்பதாவது, "அனைவருக்கும் வணக்கம்" நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன்! இதுவரை என்னைத்தான் தவறாக பேசிக்கொண்டிருந்தார்கள், இப்பொழுது தாய் தந்தையரைப் பற்றியும் மிக தவறாக பேசுகிறார்கள்!
மொழியை ஒரு போர்வையாக பயன்படுத்திக்கொண்டு தவறாக பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும்!

அன்புதான் தமிழ்
நான் ஒரு தனி மனிதன்! எனக்கென்று தனிக் கூட்டமில்லை! நான் படிக்காதவன்!
ஒரு தனி மனிதனாய் நின்று.. *"அன்புதான் தமிழ்"*
என்கிற, அரசியல் சார்பற்ற ஒரு சேவை அமைப்பை தொடங்குகிறேன்! இந்த அமைப்பின் மூலம்,
தமிழரின் மாண்பையும், தமிழரின் பண்பையும்,
தமிழரின் அன்பையும், உலகறிய செய்வதே அதன் நோக்கம்!

ஆண்டவன் உன் பக்கம்
"இன்னார் செய்தாரை ஒருத்தல் அவர் நாண, நன்னயம் செய்துவிடல்!" என்பது திருக்குறள் அதை பின்பற்றியே...
"எதிரிக்கும் உதவி செய்! பிறர் துன்பங்களை உன் துன்பமாக நினை! நாமெல்லாம் உருவத்தால்தான் வெவ்வேறு! உள்ளத்தால் ஒன்றே! கடவுளை வெளியே தேடாதே! உனக்குள் இருக்கிறார்! எனக்கு இது போதும் என்று நினை! ஆசையை விடு! அள்ளிக்கொடு!
ஆண்டவன் உன் பக்கம்!"

பிரபஞ்ச சக்தி
அந்த ஆண்டவன் இருப்பது உண்மையானால்....
தர்மம் இருப்பது உண்மையானால்.. என்வழி உண்மையானால்.. நான் துவங்கும் இந்த அறம் சார்ந்த சேவை அமைப்பிற்கு இந்த பிரபஞ்ச சக்தி துணை நிற்கட்டும்!

ரசிகர்கள் ஆதரவு
இறுதியாக ஒன்று... "என்னை தவறாக பேசிக் கொண்டிருப்பவர்களும், அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும், நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்...! அன்புடன்.. ராகவா லாரன்ஸ் என பதிவிட்டிருக்கிறார். ராகவா லாரன்ஸின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











