Raghava lawrence: அரசியலுக்கு வரணும்னு ஆசைப்பட்டேன்.. ஆனா.. ராகவா லாரன்ஸ் சொன்ன விஷயம்!
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் நடன இயக்குநராக சினிமாவில் தன்னுடைய பயணத்தை துவங்கி, அடுத்தடுத்து இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களில் செயல்பட்டு வருகிறார். நிஜ வாழ்க்கையிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தேவையானவர்களுக்கு செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் இவரது நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமானது.
தற்போது மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற மல்லர் கம்பம் என்ற சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ராகவா லாரன்ஸ், மாற்றுத் திறனாளிகளை வைத்து விரைவில் ஒரு படம் எடுக்கவுள்ளதாகவும் அதில் வரும் வருமானத்தில் அவர்களுக்கு வீடு கட்டித்தர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நயன்தாரா எத்தனை முறை நடனமாடினாலும் பார்ப்பதை போல இவர்களும் எத்தனை முறை ஆடினாலும் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ்: நடிகர் ராகவா லாரன்ஸ் நடிகர், நடன இயக்குநர், இயக்குநர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்து பன்முகங்களில் சினிமாவில் மாஸ் காட்டி வருகிறார். இவரது நடிப்பில் வெளியான காஞ்சனா படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படங்களாக மாறியுள்ளன. சினிமாவை தவிர்த்து நிஜ வாழ்க்கையிலும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பலருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். தன்னுடைய படங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு அடுத்தடுத்து நடனமாடும் வாய்ப்புகளையும் கொடுத்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக பல ஏழை குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
லாரன்சிற்கு ஊக்கம் தரும் விஷயம்: இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரிய மல்லர் கம்பம் சாகச நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ராகவா லாரன்ஸ் பங்கேற்றார். அவரது கை கொடுக்கும் கை மாற்றுத் திறனாளிகள் குழு சார்பிலும் பலரும் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் பேசிய ராகவா லாரன்ஸ், தான் தளர்வாக மாறும்போதெல்லாம் தனக்கு இந்த மாற்றுத் திறனாளிகள்தான் ஊக்கம் தந்து வருவதாகவும் இவர்களை ஆட வைத்து பார்ப்பது தனக்கு பிடித்தமான விஷயம் என்றும் கூறியுள்ளார். தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சினிமாவில் இவர்களை ஆட வைப்பதாகவும் கூறியுள்ளார்.
விஜய், விஷாலுக்கு வாழ்த்து: ஒரே மாதிரியாக இருப்பதாகவும் இவர்களை தொடர்ந்து ஆட வைக்க வேண்டாம் என்றும் தனக்கு கூறப்படுவதுண்டு. நயன்தாரா எத்தனை முறை ஆடினாலும் பார்க்கிறார்களே, அதுபோல, இவர்கள் ஆட்டத்தையும் பார்க்கட்டும் என்று தான் பதிலளிப்பேன் என்றும் லாரன்ஸ் கூறியுள்ளார். இதனிடையே அடுத்தடுத்து விஜய், விஷால் அரசியலில் என்ட்ரி ஆகியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள ராகவா லாரன்ஸ் விருப்பமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் அவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார். அவரது அரசியல் பிரவேசம் குறித்தும் அவர் பேசியுள்ளார்.

விஜய்க்காக பிரார்த்தனை: தேர்தலில் அனைவரும் ஓட்டுப் போட வேண்டும் என்றும் பிடித்தவர்களுக்கு யோசித்து போட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். விஜய் அரசியலில் என்ட்ரியாகியுள்ளது நண்பராக தனக்கு பெருமை அளிப்பதாகவும் மக்கள் அவர்மீது வைத்துள்ள அன்பிற்கு அவர் பதிலுக்கு செய்ய வேண்டும் என்று நினைப்பதாகவும் ராகவா தெரிவித்துள்ளார். அவர் அரசியலுக்கு வந்தது சந்தோஷம் என்றும் கூறியுள்ளார். அவர் மேன்மேலும் வெற்றியடைய தான் பிரார்த்திப்பதாகவும் லாரன்ஸ் கூறியுள்ளார். விஷாலுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அரசியல் குறித்து அம்மா அட்வைஸ்: தான் பவரில் இருப்பவர்களிடம் எந்தமாதிரியான உதவி கேட்டாலும் அவர்கள் சொன்னால், ஓபன் ஹார்ட் சர்ஜரி முதற்கொண்டு அனைத்தும் நடப்பதை பார்த்துள்ளதாகவும் அதனால் தனக்கும் அரசியலில் அவர்கள் இடத்தில் இருப்பதற்கு ஆசை வந்துள்ளதாகவும் இதுகுறித்து தன்னுடைய அம்மாவிடம் கேட்டதாகவும் கூறியுள்ளார். தன்னுடைய அம்மாவை கேட்காமல் தான் இதுவரை எதையும் செய்ததில்லை என்று கூறிய லாரன்ஸ், தான் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் ஆனால் அரசியல் வேண்டாம் என்று தன்னுடைய அம்மா கூறிவிட்டதாகவும் அதனால் அம்மா வார்த்தையை மீறி தான் எதையும் செய்ய மாட்டேன் என்றும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











