ஐஸ்வர்யா ராய் எல்லாம் நம்ம கிட்ட பேசுவாங்கனு நினைச்சுக்கூட பார்க்கல.. ஆனா, அவங்களோ.. ரகுமான் பளிச்!
சென்னை: பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள பாடல்கள் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் குறித்து நடிகர் ரகுமான் அளித்த பேட்டி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

டிரெண்டிங்கில் ஐஸ்வர்யா ராய்
பொன்னியின் செல்வன் புத்தகத்தில் கற்பனையாக படித்த நந்தினியை திரை வடிவில் காண்பித்து ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராய். முதல் பாகத்தின் கடைசியில் ஊமை ராணியாகவும் நடித்து ரசிகர்களுக்கு இனபதிர்ச்சி கொடுத்திருந்தார். இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில், #AishwaryaRaiBachchan ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

சென்னையில் ஐஸ்வர்யா ராய்
பொன்னியின் செல்வன் 2 ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள ஐஸ்வர்யா ராய் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று இரவு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராயை ரசிக்க ஏகப்பட்ட ரசிகர்களுடன் சேர்ந்து சினிமா பிரபலங்களும் ஆர்வமாக உள்ளதாக கூறுகின்றனர்.

கமல், சிம்பு
கடந்த முறை நடைபெற்ற பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் மற்றும் ரஜினிகாந்த் பங்கேற்ற நிலையில், இந்த முறை கமல் மற்றும் சிம்பு கலந்து கொள்ள உள்ளதாக கூறுகின்றனர். நடிகர் விஜய்யை சிறப்பு விருந்தினராக அழைத்ததாகவும் அவர் மறுப்பு தெரிவித்து விட்டார் என்றும் பேச்சுவார்த்தைகள் பரவின.

சிவகார்த்திகேயன் பங்கேற்கிறாரா
சமீபத்தில் நடந்த கவுதம் கார்த்திக்கின் 1947 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட நிலையில், இன்றைய நிகழ்ச்சியிலும் சிவகார்த்திகேயன் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் அடுத்து கமல் நடிக்க உள்ள நிலையில், அவர் பங்கேற்கிறார். கமல் தயாரிப்பில் சிம்புவும் சிவகார்த்திகேயனும் நடிக்க உள்ள நிலையில், இருவரும் பங்கேற்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.

ரகுமான் பேட்டி
பொன்னியின் செல்வன் படத்தில் மதுராந்தக சோழனாக நடித்துள்ள நடிகர் ரகுமான் சமீபத்தில் அளித்த பேட்டியில் பொன்னியின் செல்வன் படத்தை பற்றியும் அதில் ஐஸ்வர்யா ராயுடன் தான் இணைந்து நடித்தது பற்றியும் விரிவாக பேசி உள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

ஐஸ்வர்யாலாம் நம்ம கிட்ட பேசுவாரா
ஐஸ்வர்யா ராய் எல்லாம் நம்ம கிட்ட பேசுவாரா என நினைத்துக் கொண்டிருந்தேன். எனக்கும் அவருக்கும் தான் முதல் நாள் படப்பிடிப்பே இருந்தது. ஆனால், நான் நினைத்தது எந்த அளவுக்கு தவறு என்று உணரும் அளவுக்கு என்னை பார்த்ததுமே என் படங்களை பற்றியும் என்னை பற்றியும் அவர் விசாரித்து பேசியது என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது எனக் கூறியுள்ளார். ஒருவரை சந்தித்ததுமே அவர் குறித்து ஐஸ்வர்யா ராய் கூகுள் செய்து அனைத்தையும் அறிந்து வைத்திருப்பாரா என ஆச்சர்யப்பட்டேன் எனக் கூறியுள்ளார்.

2ம் பாகம் மிரட்டும்
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெறும் ட்ரெய்லர் மட்டும் தான் என்றும் இரண்டாம் பாகத்தில் தான் பெரிய விஷயங்கள் பல அரங்கேற உள்ளன. பொன்னியின் செல்வன் 2ம் பாகம் நிச்சயம் மிரட்டும். ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், ஊமைராணியாகவும் இந்த படத்தில் தனது ஒட்டுமொத்த நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தி இருக்கிறார். மணிரத்னம் படத்தில் மட்டுமே வேறு ஒரு ஐஸ்வர்யா ராயை ரசிகர்கள் காணலாம் என்றும் ரகுமான் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











