உஷாரா இருங்க.. என்னுடன் இருக்கும் போட்டோகளைக் காட்டி ஏமாற்றுகிறார்கள்.. ராஜ் கிரண் எச்சரிக்கை!
சென்னை: தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் ராஜ் கிரண். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல்வேறு முகங்களைக் கொண்ட இவர் இப்போதெல்லாம் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார். கடைசியா இவர் கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி வெளியான மெய்யழகன் படத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் தனுஷ் இயக்கத்தில் உருவாகி, தனுஷ் நடித்துள்ள இட்லி கடை படத்தில் நடித்துள்ளார். இப்படியான நிலையில் இவர், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் இந்தப் பதிவு சமகால அரசியல் சூழலோடும் பொருந்திப் போவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ராஜ் கிரண், தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர். நடிகர் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். அதேபோல் தனுஷ்ஷின் தந்தை கஸ்தூரி ராஜாவை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர். அதன் காரணமாகத்தான், தனுஷ் தான் இயக்கிய முதல் படமான பவர் பாண்டி படத்தில் ராஜ் கிரண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு படத்தினை எடுத்தார். நடிகர் வடிவேலுவை இவர் சினிமாவில் அறிமுகப்படுத்தியத்தியதே மிகவும் சுவாரஸ்யமான கதை என்று கூறலாம்.

இப்படியான நிலையில் ராஜ் கிரண் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. குறிப்பாக இவரது முகநூல் பதிவினை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். மேலும் அவர் அந்தப் பதிவோடு, "அண்ணனை செமத்தியா கலாய்ச்சி இருக்காரு 😀😀" என சீமானை மறைமுகமாக சாடியுள்ளார்.
முகநூல்: ராஜ் கிரண் தனது முகநூல் பக்கத்தில், " நான் ஒரு நடிகன் என்பதால், என்னை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்காக என்று சிலரும், என்னை வைத்து திரைப்படம் இயக்குவதற்காக என்று சிலரும், என் அபிமானிகள் என்றும், என் தீவிர ரசிகர்கள் என்று பலரும், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதென்பது, சாதாரணமாக நடக்கும் விசயம். இம்மாதிரியான புகைப்படங்களை வைத்துக்கொண்டு, என் சொந்தக்காரர்கள் என்றோ, எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றோ கூறிக்கொண்டு, யார் என்ன காரணத்திற்காக உங்களை அணுகினாலும் அவர்களிடம் மிக கவனமாக இருங்கள்.

கதைகள்: "கனடா செல்வம்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, என்னை வைத்து படம் தயாரிப்பதெற்கென்று, ஒரு சிபாரிசு மூலம் என்னிடம் வந்து பேசி, என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்ற ஒரு நபர், அதன் பிறகு என்னை சந்திக்கவுமில்லை. படம் தயாரிக்கவும் இல்லை. இது நடந்து ஏழெட்டு வருடங்கள் ஆகிறது. அதே நபர் சமீபத்தில் தளபதி என்ற ஒரு தயாரிப்பாளர், இயக்குனரிடம், என்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைக்காட்டி, தன் பெயரை "ஸ்டார்லின்" என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, ஏதோ ஒரு வகையில் அந்த தளபதி என்பவரை ஏமாற்ற முயன்றதாக என் காதுக்கு செய்திகள் வருகிறது... என்னிடம், யார் சிபாரிசும் எடுபடாது.
கமெண்ட்: என் விசயங்களில், நான் மட்டுமே முடிவெடுக்கிறேன். என்னுடன் இருக்கும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, கதைகள் பல சொல்லி, யாரும் யாரையும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காகவே, இந்தப்பதிவு" என பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவினைப் பார்த்த, முகநூல் வாசிகள், "இப்போது நடப்பதை பார்த்தால் எல்லோரும் இது போன்ற ஒரு ஒரு பதிவை போட்டு வைப்பது நல்லது என்றே தோன்றுகிறது..கடைகளில் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்பது போல" என கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











