Ameer - கார்த்தி என்ன பெரிய சிவாஜியா.. அவன் ஒரு களவாணி பய.. அமீருக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர்
சென்னை: Ameer (அமீர்) பருத்திவீரன் விவகாரத்தில் அமீருக்கு ஆதரவாக நடிகர் ராஜா அதிரடி கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
பருத்திவீரன் படம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவரும் சூழலில் மீண்டும் அந்தப் பஞ்சாயத்து பொதுவெளிக்கு வந்திருக்கிறது. கார்த்தி 25 விழாவுக்கு தனக்கு முறையான அழைப்பு இல்லை அதனால் செல்லவில்லை என அமீர் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். அதனையடுத்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த ஒரு பேட்டியில் அமீர் குறித்து தரக்குறைவாக பேசினார்.

என்ன பேசினார்?: அந்தப் பேட்டியில் அவர், "அமீர் ஒரு திருடன். அவர் மார்க்கெட்டில் ஓடாத குதிரை. சூர்யா, கார்த்திக்கு அவர் வாழ்க்கை கொடுக்கவில்லை. சூர்யாதான் அமீருக்கு வாழ்க்கை கொடுத்தார். அமீரால் எந்தக் காலத்திலும் யாருக்கும் பிரோயஜனம் இருக்காது" என பல பல விஷயங்களில் அமீரை மட்டம் தட்டி பேசினார். அந்தப் பேட்டிக்கு அமீரும் அறிக்கை வெளியிட்டு பதிலடி கொடுத்திருந்தார்.
அமீரின் பருத்திவீரர்கள்: அமீர் அறிக்கை வெளியிட்ட பிறகு பருத்திவீரன் படத்தின் பணியாற்றிய சசிகுமார், சமுத்திரகனி, பொன்வண்ணன், சினேகன் உள்ளிட்டோர் தங்கள் தரப்பு கருத்தை தெரிவித்து அமீருக்கு ஆதரவாக நின்றனர். அவர்கள் தவிர்த்து இயக்குநர்கள் கரு.பழனியப்பன், பாரதிராஜா ஆகியோரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
கரு.பழனியப்பன் அறிக்கை: கரு.பழனியப்பன் வெளியிட்டிருந்த அறிக்கையில், சிவக்குமார் குடும்ப இதற்கு பின்னால் இருப்பதாக சந்தேக நிழல் விழுவதாக குறிப்பிட்டிருந்தார். அதனையடுத்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் அந்த வருத்தம் போலியான வருத்தம் என சசிகுமாரும்; வருத்தம் தெரிவிக்கிற சீன் எல்லாம் இங்கு இல்லை பணத்தை திருப்பி கொடுங்கள் என சமுத்திரகனியும் தெரிவித்தனர்.
ராஜா பேட்டி: இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவரும்; மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவருமான ராஜா இந்த விவகாரம் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "பருத்திவீரனில் என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு அத்தனையுமே தெரியும். ஏனெனில் அந்தப் படத்தில் நான் உதவி இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றியிருந்தேன்.
களவாணி பய: ஞானவேல் ராஜாவை பூஜை அன்று ஆஃபிஸில் பார்த்தது. அதற்கு பிறகு ஒருநாள்கூட அவரை நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்தது இல்லை. அவர்தான் தயாரிப்பாளர் என்கிறாரே. எந்த லொக்கேஷனில் ஷூட்டிங் நடந்தது என்று சொல்லச்சொல்லுங்கள் பார்ப்போம். பருத்திவீரனில் அவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கும்போது அவர் கண்ணுக்கு பன்றிகள் மட்டும்தான் தெரிந்திருக்கிறது. காமாலை வந்தவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்று சொல்வார்கள். அதுபோல் ஞானவேல் ராஜா ஒரு களவாணி பய. அதனால்தான் பார்ப்பவர்களை எல்லாம் திருடர்களாக தெரிந்திருக்கிறது." என்றார்.
கார்த்தி: மேலும் கார்த்தி பற்றி பேசிய அவர், "கார்த்தி 25க்கு அமீரை முறைப்படி அழைத்திருந்திருக்கலாமே. அப்படி அழைத்திருந்தால் அவரும் சென்று வாழ்த்திவிட்டு வந்திருப்பார். கார்த்தி இப்போது 25 படங்கள் நடித்திருக்கிறார். ஆனால் அதற்கான விதை யார் போட்டது அமீர்தானே. அவர் எத்தனை படங்கள் நடித்தாலும் பருத்திவீரன் படம்தான் அடையாளமாக இருக்கிறது. அமீர் ஒன்றும் ஞானவேல் பணத்தில் வேலை கற்றுக்கொள்ளவில்லை. அமீரிடம்தான் கார்த்தி கற்றுக்கொண்டார்.
ஷூட்டிங்கை பல வருடங்கள் இழுத்தடித்தார் என்றும்; இரண்டே முக்கால் லட்சம் அடியில் படம் எடுத்தார் என்றும் ஞானவேல் சொல்கிறார். அது ஒன்றும் அமீரால் அப்படி நடக்கவில்லை. கார்த்தியால்தான் அதெல்லாம் நடந்தது. அவர் என்ன பெரிய சிவாஜி கணேசனா?.. ஞானவேல் பேசியதற்கு அடுத்த நாளே கார்த்தியோ, சூர்யாவோ, சிவக்குமாரோ பொதுவெளியில் வந்து எங்களுக்கும் அவருக்கு சம்பந்தம் இல்லை என்று சொல்ல வேண்டியதுதானே. அப்படி நடக்காதபோதுதான் அவர்கள் பின்னணியில் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது.
கார்த்தியிடம் ஒன்று கேட்கிறேன். பருத்திவீரன் படம் ரிலீஸான பிறகு ஏன் நீங்கள் வந்து அமீரை ஒருமுறைக்கூட பார்க்கவில்லை. உன் குருநாதரை பொதுவெளியில் அவ்வளவு அசிங்கமா கேவலமா ஒருத்தர் பேசியதை ரசித்த ஒரே சிஷ்யன் நீயாகத்தான் இருப்ப" என்றும் அதிரடியாக பேசினார்.


Click it and Unblock the Notifications











