Rajesh: எம்.ஜி.ஆர் உடன் நெருக்கம்.. ஜானகிக்கு விஸ்வாசம்.. ஜெயலலிதாவை எதிர்த்த ராஜேஷ்.. விவரம் இதோ!
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று கொண்டு உள்ளார்கள். பலர் இணையத்தில் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் ராஜேஷின் கடந்த காலத்தில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்க்குப் பின்னர் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்கள் பலருக்கும் எம்.ஜி.ஆர் அபிமான நடிகராக இருந்துள்ளார். சினிமாவில் இருந்து கொண்டு அவர் அரசியலில் களமிறங்கியதும், அவரது ரசிகர்கள் அப்படியே தொண்டர்களாக மாறிவிட்டார்கள். அப்படியானவர்களில் ஒருவர்தான் நடிகர் ராஜேஷ். நடிகர் ராஜேஷ் இயக்குநர் இமயம் கே பாலச்சந்தர் பட்டறையில் இருந்து வந்தவர். அதன் பின்னர் பல இயக்குநர்களின் படங்களில் அவர் நடித்திருந்தாலும், பாலச்சந்தர் பட்டறை என்பதற்கு தகுதியானவராகவே தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

ஏற்கனவே கூறியதைப் போல் ராஜேஷ் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் மற்றும் தீவிர தொண்டர். சினிமாவில் தான் வளர்ந்து வந்த காலகட்டத்தில் சென்னை கே.கே. நகர் பகுதியில் ராஜேஷ் படப்பிடிப்புக்கு என தனி வீட்டை பிரமாண்டமாக கட்டினார். இந்த வீட்டை திறந்து வைக்க அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். எம்.ஜி.ஆரும் ராஜேஷ் மீது இருந்த அன்பு மற்றும் பிரியத்தினால் அந்த வீட்டைத் திறந்து வைக்க வருகை தந்தார். இந்த சம்பவம் 1983 ஆம் ஆண்டு நடைபெற்றது.
ஜானகி மீது விஸ்வாசம்: 1987ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உடல் நலக் குறைவால் இறந்தார். அதன் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. அதாவது, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி தலைமையை ஏற்றுக்கொண்ட ஒரு அணி அதேபோல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதா தலைமையை ஏற்றுக் கொண்ட அணி என இரண்டு அணிகள் உருவானது.

ஜெயலலிதாவை எதிர்த்து: 1989 ஆம் ஆண்டில் இருந்து 1991ஆம் ஆண்டு வரை ராஜேஷ் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகிக்கு ஆதரவாக பிரச்சாரங்கள் செய்தார். அந்த காலத்தில் அவர் திமுகவை விமர்சித்ததைக் காட்டிலும் ஜெயலலிதா மற்றும் அவரது அணியில் இருந்தவர்களை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்தார். எம்.ஜி.ஆர்க்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவராக இருந்த ராஜேஷ், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகிக்கு ஆதரவாக அரசியல் களத்தில் குதித்தார். அப்போது எம்.ஜி.ஆர் மீது இருந்த பிரியம் மற்றும் ஜானகி மீது இருந்த விஸ்வாசத்தால் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
75 வது வயதில்: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அதிமுகவை மொத்தமாக ஒப்படைத்த ஜானகி, அரசியலில் இருந்து விலகினார். அதன் பின்னர் அரசியலில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தவர், அவ்வப்போது மட்டும் அரசியல் மேடைகளில் காணப்பட்டார். ராஜேஷ் அவரது 75 வது வயதில் குறைவான இரத்த அழுத்தம் காரணமாக இறந்தார். அவரது மறைவு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











