நடிகர் ராஜேஷின் உடல் நல்லடக்கம்.. நண்பனை இழந்துவிட்டேன்.. ரஜினி உருக்கம்!
சென்னை: பழம்பெரும் நடிகர் ராஜேஷ் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், திரைத்துறை பிரபலங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், சற்று முன் அவரின் இறுதிச்சடங்கு நடந்தது.
அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ராஜேஷ், வடிக்கரசியுடன் சேர்ந்து 'கன்னிப் பருவத்திலே' படத்தின் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தை தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த வியாழக்கிழமை காலை மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் ராஜேஷின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் மற்றும் நடிகர் நடிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

ரஜினி உருக்கம்: ராஜேஷின் மகள் திவ்யா கனடாவில் இருப்பதால், ஜூன் 1ந் தேதி இறுதிச்சடங்கு நடைபெறும் என கூறப்பட்டது. மகள் இன்று காலையே வந்துவிட்டதால், இன்றே இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த், ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, என்னுடைய நெருங்கிய நண்பர் ராஜேஷ் அவர்கள்,எனக்கு மட்டுமில்லை பலருக்கும் நல்ல நண்பர். ராஜேஷ் பெரிய நடிகரோ, பெரிய குணசித்திர நடிகரோ, பெரிய தயாரிப்பாளரோ, இயக்குனரோ இல்லை. தமிழக முதலமைச்சரில் இருந்து, இசைஞானி இளையராஜா என அனைத்து பிரபலங்களும் வந்த அஞ்சலி செலுத்தினார்கள் என்றால், அவர் எப்படி வாழ்ந்து இருக்கிறார் என்பதற்கு அதுவே சான்று.
பேரதிர்ச்சி: ஆடு தொட இலை என்று சொல்வார்கள். அது போல அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை. நிறைய படிப்பார், நிறைய விஷயத்தை தெரிந்து கொள்வார். உலக சினிமா, அரசியல், விஞ்ஞானம், ஆன்மீகம் என அனைத்தையும் தேடி தேடி தெரிந்து கொள்வார். அவருக்கு தெரிந்த விஷயம் மற்றவர்களுக்கும் தெரியவேண்டும் என பாடுபட்டார். என்னை அடிக்கடி சந்தித்து பேசுவார், நீங்க ரொம்ப நாள் நன்றாக இருக்க வேண்டும் அதற்கு என்னென்ன செய்ய வேண்டும், எதை சாப்பிட வேண்டும் என்பதை சொல்லுவார். அவர் இல்லாதது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. நல்ல மனிதர், அவர் இழப்பு பேரிழப்பு அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்றார்.
நல்லடக்கம்: இதையடுத்து பிற்பகல் 2 மணி அளவில் அசோக் நகரில் உள்ள சிலுவை ஆலயத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இறுதி திருப்பலி செய்யப்பட்டு, அங்கிருந்து கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு இறுதிஅஞ்சலி செலுத்தப்பட்டது. காரல் மார்க்ஸின் புத்தகத்தை படித்துவிட்டு அவர் மீது ஈடுபாடு கொண்ட ராஜேஷ், அவரது கல்லறைக்கு சென்றுள்ளார். அந்த கல்லறை அவருக்கு பிடித்துவிட, அந்த கல்லறைப்போல, அடுத்த வருடமே தனக்கு தானே ஒரு கல்லறைக் கட்டி, மனைவியின் கல்லறைக்கு கீழ் தனக்கும் இடத்தைவிட்டு இருந்தார். அதே கல்லறையில் இன்று அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications











