Lal salaam :மும்பைக்கு வரும் நம்ம பாய்.. நாளை வெளியாகும் ரஜினியின் கேரக்டர் மற்றும் போஸ்டர்!
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. சில பேட்ச் வேலைகளை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் படத்தில் இணைகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
இந்தப் படத்தில் முஸ்லிம் கேரக்டரில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகவும் இதற்காக நீண்ட தாடி மற்றும் மீசையை அவர் வளர்த்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லால் சலாம் மும்பை சூட்டிங்கில் இணையும் ரஜினி : நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்த அவர், அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை தொடர்ந்து சிறிதும் ஓய்வெடுக்காமல் அடுத்த படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார்.
தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகிவரும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள நிலையில், இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் சென்னையில் ரஜினிகாந்த் இல்லாமலேயே நடந்து முடிந்துள்ளது. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் இணைந்திருந்தனர். கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் நாளை முதல் மும்பையில் துவங்கி நடைபெறவுள்ளது.

இந்த மும்பை சூட்டிங்கில் நாளை நடிகர் ரஜினிகாந்த் இணையவுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் இயக்குநரும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினி பகிர்ந்துள்ளார். இன்று நள்ளிரவில் அவர் மும்பை வரவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே இதுகுறித்து தகவலை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா நிறுவனம் நாளை 12 மணியளவில் படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயர் மற்றும் கெட்டப்பை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதையொட்டிய போஸ்டரையும் ஐஸ்வர்யா ரஜினி மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது. மும்பைக்கு நம்முடைய பாய் வரவுள்ளதாக லைகா தெரிவித்துள்ளது. லால் சலாம் படத்தின் சூட்டிங்கில் இணையும் ரஜினிகாந்த் ஒரே கட்டமாக இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு, சில தினங்கள் ஓய்வெடுக்கவுள்ளதார். இதை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் அவர் அடுத்த படத்தில் இணையவுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்கவுள்ள நிலையில் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு தற்காலிகாக தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் ரஜினி இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











