கொரோனாவால் முடங்கிய தொழில்.. சினிமா தொழிலாளர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கினார் ரஜினிகாந்த்!
சென்னை: கொரோனாவால் சினிமா படப்பிடிப்புகள் ரத்தாகி உள்ள நிலையில் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகமே பெரும் பீதியில் உறைந்துள்ளது. உலகம் முழுக்க இதுவரை 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் மட்டும் இதுவரை கொரோனா வைரஸ்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

படப்பிடிப்புகள் ரத்து
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த ஒரு வாரமாக பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ் திரைப்படத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த 19ஆம் தேதி முதல் தமிழ் சினிமாவின் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வேண்டுகோள்
இதனால் படப்பிடிப்பை நம்பியிருந்த திரைப்பட தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து தினசரி சம்பளம் பெறும் திரைப்பட தொழிலாளர்களுக்கு, நல்ல நிலையில் இருக்கும் நடிகர் நடிகைகள் உதவ வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கமான ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.

ரஜினி 50 லட்சம்
இதனை ஏற்று நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். அவரை தொடர்ந்து நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் 10 லட்சம் ரூபாய் வழங்கினர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ஃபெஃப்சி அமைப்புக்கு 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். இதற்கான காசோலையை ஃபெஃப்சி அமைப்பிடம் வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்.

பிரகாஷ் ராஜ்
இதேபோல் கலைப்புலி எஸ். தாணு நேற்று 100 அரிசி மூட்டைகளை வழங்கினார். நடிகர் பிரகாஷ் ராஜ் தலா 25 கிலோ எடை கொண்ட 150 அரிசி மூட்டைகளை வழங்கினார். இதேபோல் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் 100 கிலோ அரிசி வழங்கிறது.


Click it and Unblock the Notifications











