கேட்கவே இல்லை.. ஆனால் டன் கணக்கில் பொருளுதவி செய்த ரஜினிகாந்த்.. நெகிழ்ந்து போன இயக்குநர்கள் சங்கம்!
சென்னை: கேட்கமலேயே நடிகர் ரஜினிகாந்த் செய்த பொருளுதவியால் நெகிழ்ந்து போயுள்ளது இயக்குநர்கள் சங்கம்.
கொரோனா வைரஸ் உலகம் முழுக்கவும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு லட்சத்து 84 ஆயிரத்துக்கும் மேலானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் தனது ஆட்டத்தை ஆடி வருகிறது கொரோனா வைரஸ்.

ஊரடங்கு
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 680க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த 25ஆம் தேதி முதல் நாடு ஊரடங்கு அறிவித்துள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு
முதலில் அறிவித்த ஊரடங்கு கடந்த 14ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் வரும் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இந்தியாவில் தொழில்துறை முற்றிலும் முடங்கியுள்ளது.

ஃபெஃப்சி கோரிக்கை
எந்த வேலையும் நடைபெறாததால் சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு தொழில் துறையை சேர்ந்த பலரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக தினக்கூலியை நம்பியுள்ள மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நல்ல நிலையில் இருக்கும் நடிகர் நடிகைகள் ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.

நடிகர் ரஜினிகாந்த்
இதனை தொடர்ந்து நடிகர்கள் சிவகார்த்திகேயன், லாரன்ஸ், அஜித், விஜய் என பலரும் ஃபெஃப்சி அமைப்புக்கு உதவிக்கரம் நீட்டினர். அதிகபட்சமாக நடிகர் ரஜினிகாந்த ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர்கள் சங்கத்திற்கு கேட்காமலேயே உதவி செய்துள்ளார்.

24 டன் எடை
அதாவது, 1500 பேருக்கு உதவும் வகையில் 10 கிலோ எடை கொண்ட அரசி மூடைகள் மற்றும் 6 கிலோ எடை கொண்ட மளிகைப் பொருட்கள் என மொத்தம் 24 டன் எடை கொண்ட பொருட்களை லாரி லாரியாக அனுப்பியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். கேட்கமாலே ரஜினி செய்த இந்த உதவியால் இயக்குநர்கள் சங்கம் நெகிழ்ந்து போயிருக்கிறது.

கிடைக்கப் பெற்றோம்
இது தொடர்பாக ரஜினிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,"இன்றைய கோவிட் 19 வைரஸ் எதிர்ப்பில் தொழிலின்றி வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் உங்கள் கலைக் குடும்பத்தின் இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்கு தாங்கள் இன்று அனுப்பி வைத்த நிவாரண பொருட்கள் கிடைக்கப் பெற்றோம்.

நலமும் புகழும் உயரட்டும்..
குறிப்பறிந்து கேட்காமலேயே, உங்கள் கலைக்குடும்ப சகோதரர்களுக்கு வாரி வழங்கும் தங்கள் கொடையுள்ளத்தை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. போற்றுகிறோம். தங்கள் நலமும் புகழும் உயரட்டும் குடும்பம் நீடுழிவாழட்டும்" இவ்வாறு இயக்குநர்கள் சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











