சுஜித் உயிருடன் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன்.. ரஜினிகாந்த் உருக்கம்!
சென்னை: ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுஜித் உயிருடன் மீண்டு வரவேண்டும் என ஆண்டவனை பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி தம்பதியின் மகன் சுஜித் வில்சன். இரண்டு வயதான இந்த குழந்தை நேற்று முன்தினம் மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
குழந்தையை மீட்கும் பணி மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தனியார் நிறுவனத்தின் ரிக் எந்திரம் மூலம் குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

ரிக் எந்திரம் மூலம்
ஓஎன்ஜிசி, தேசிய பேரிடர் மீட்பு குழு உள்ளிட்ட மீட்பு குழுவினர்களும் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 100 அடிக்கு கீழே சிக்கியிருக்கும் குழந்தையை மீட்க, பக்கத்தில் 2 மீட்டர் இடைவெளியில் ரிக் எந்திரம் மூலம் குழி தோண்டப்படுகிறது.

அமைச்சர்கள் முகாம்
குழிக்குள் மூன்று தீயணைப்பு வீரர்கள் இறங்கி குழந்தையை மீட்டு வரவுள்ளனர். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் சம்பவ இடத்தில் மூன்றாவது நாளாக முகாமிட்டுள்ளனர்.

ரஜினிகாந்த் கருத்து
குழந்தை சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் பிரார்த்தனை செய்து வருகிறது. இந்நிலையில் குழந்தை சுஜித் உயிருடன், நலமுடன் மீட்கப்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இறைவனை பிரார்த்திக்கிறேன்
தீபாவளியை முன்னிட்டு தனது வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை சந்தித்து வாழ்த்து கூறினார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித், நலமுடன் உயிருடன் மீண்டு வர வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அரசுக்கு சப்போர்ட்
குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோர்களும் கவனமுடன் இருக்க வேண்டும். குழந்தையை மீட்க அரசு, அதிகாரிகள் விடா முயற்சியுடன் முயற்சிக்கின்றனர். அரசை குறை சொல்ல முடியாது, இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











