Rajinikanth: திருவனந்தபுரத்தில் துவங்கும் தலைவர் 170 சூட்டிங்.. ரஜினியோடு இணையும் நடிகர்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படம் ஏற்படுத்தியுள்ள அதிரிபுதிரி வெற்றியால் ரஜினிகாந்த் மிகவும் உற்சாகமடைந்துள்ளார்.
ஆனால் இந்த வெற்றி படத்தின் ரிலீசை தொடர்ந்து 5 நாட்கள் மட்டுமே இருந்ததாகவும் அதையடுத்து அடுத்தப்படம் குறித்த பயம் தனக்கு ஏற்பட்டதாகவும் தன்னுடைய முந்தைய பேட்டியில் ரஜினி தெரிவித்துள்ளார். தற்போது தன்னுடைய மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் இணையவுள்ளார்.

ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தின் முதல்கட்ட சூட்டிங் அப்டேட்: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதத்தில் வெளியான ஜெயிலர் படம் அவருக்கு சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளது. இந்தப் படம் சர்வதேச அளவில் வெளியாகி சிறப்பான வசூலையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால், சுனில், வினாயகன், வசந்த் ரவி, மிர்ணா உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள நிலையில், படத்தை இயக்கியுள்ளார் நெல்சன்.
முன்னதாக விஜய்யுடன் நெல்சன் இணைந்திருந்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்ததாக கண்டிப்பான வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில்தான் ஜெயிலர் படத்தை இயக்கினார் நெல்சன். ஆனால் இந்தப் படம் நினைத்ததை காட்டிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை காட்டிலும் அதிகப்படியான வெற்றியை கொடுத்துள்ளது. சர்வதேச அளவில் இந்தப் படம் 700 கோடி ரூபாய் கலெக்ஷனை அள்ளியுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் முஸ்லீம் பெரியவர் கேரக்டரில் அவர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் மும்பை, சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படத்தின் டப்பிங்கையும் சமீபத்தில் ரஜினி நிறைவு செய்துள்ளார். இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்திற்காக இணையவுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் செப்டம்பர் மாதத்திலேயே துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் சூட்டிங் தற்போது அடுத்த மாதம் முதல் வாரத்தில் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஷெட்யூலில் பகத் பாசிலும் இணையவுள்ளார்.
இதையடுத்து அடுத்தடுத்த கட்டங்களாக நாகர்கோயில், கன்னியாகுமரி போன்ற இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் கன்னியாகுமரி ஸ்லாங்கில் ரஜினிகாந்த் பேசவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போலியான என்கவுண்டர்களுக்கு எதிராக போராடும் காவல் அதிகாரியாக இந்தப் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். ஜெய்பீம் படத்தை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் அழுத்தமான கதைக்களத்துடன் தலைவர் 170 உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஜெயிலர் படம் கொடுத்துள்ள வெற்றியால் தனக்கு அதிகப்படியான பயம் வந்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசிய ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த படங்களையும் வெற்றிப்படங்களாக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இதையொட்டி ஞானவேலிடம் பேசிய ரஜினிகாந்த், போதிய அவகாசம் எடுத்துக் கொண்டு சிறப்பான வெற்றியை கொடுக்க அறிவுறுத்தியதாகவும் அதனால்தான் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











