அஜித்குமார் கொலை! ஏழைகள் மீது உடனே பாயும் சட்டம்.. அதிகார வர்க்கத்தினர் என்றால் பம்முமா? ராஜ்கிரண் ஆவேசம்
சென்னை: தமிழ்நாடு காவல்துறைக்கு மட்டும் அல்லாமல் தமிழ்நாடு அரசுக்குமே அவப்பெயரை ஏற்படுத்தியுள்ள விஷயமாக மாறி இருப்பது, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், அஜித் குமார் காவல்துறையால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம்தான். முதலமைச்சர் போனில் விளித்து மன்னிப்பு கேட்டாலும், அஜித்குமாரின் குடும்பத்திற்கு வீட்டு மனை பட்டாவும், அவரது சகோதரருக்கு அரசு வேலைக்கான அரசாணையும் வழங்கினாலும் அஜித்குமாரின் இருப்புக்கு அது ஈடாகாது. இந்த விஷயம் தொடர்பாக பல திரைப் பிரபலங்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மட்டப்புரம் கோவில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித்கு மார். சம்பவம் நடந்த தினத்தில், நிகிதா என்ற பெண் கோவிலுக்கு வந்துள்ளார். கோவிலுக்கு வந்தவர் தனது நகையை அஜித்குமார் திருடிவிட்டதாக காவல்துறை மேல் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனால் வழக்கே பதியாமல், அஜித்குமாரை காவல்துறையினர் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கி உள்ளனர். காவல்துறை தாக்கியதில் அஜித்குமாருக்கு வலிப்பு ஏற்பட்டு, மரணமடைந்தார்.

இது தொடர்பான தகவல்கள் வெளியே வந்தது மட்டும் இல்லாமல், காவல்துறை இதை மறைக்கவும் முயற்சி செய்ததும் அம்பலமாகி வருகிறது. அஜித் குமார் கொலை வழக்கு பூதாகரமாக மாறியதால், ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அஜித் குமார் கொலைக்கு பலரும் கண்டனக் குரல்களை எழுப்பி வருகிறார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை - மகன், ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் காவல்துறையால் அடித்தே கொல்லப்பட்டார்கள். அவர்களின் கொலைக்குப் பின்னர் இப்போது அஜித் குமாரின் கொலைக்கு நடுவே சுமார் 20க்கும் மேற்பட்ட லாக்-அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளது. ஆனால் அவை எல்லாம் இந்த அளவுக்கு பூதாகரமாக மாறவில்லை.
ஜெயராஜ், ஃபெனிக்ஸ், அஜித்குமார் உள்ளிட்டோர் காவல்துறையால் அடுத்தே கொல்லப்பட்ட சம்பவங்கள் நடைபெற்ற ஆண்டுக்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் வருவதால்தான், இந்த லாக்-அப் மரணங்களை எதிர்க்கட்சிகள் பூதாகரமாக மாற்றுகின்றது என்ற எண்ணம் பலருக்குள்ளும் உள்ளது. இந்நிலையில் அஜித்குமார் மரணம் தொடர்பாக நடிகர், தயாரிப்பளார், இயக்குநர் ராஜ் கிரண் தனது முகநூல் பக்கத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளர்.

அவரது பதிவில், " தம்பி அஜித்குமாரை,
ஐந்து ஆறு காவல்துறை
யினர் சேர்ந்து,
அடித்தே கொன்ற
"கொடுங்கொலை" யை
நினைத்து நினைத்து
நெஞ்சம் பதறுகிறது,
இரத்தம் கொதிக்கிறது...
இதுபற்றி சமூக வலைத்தளங்களில்,
எவ்வளவோ செய்திகள்
வந்து கொண்டிருக்கின்றன...
ஆனால்,
இவற்றிற்கெல்லாம்
மூல காரணமான,
தம்பி அஜித்குமார் மீது
புகார் அளித்ததாகக்கூறப்படும்
"நிகிதா" என்ற பெண்ணை
காவல்துறை கைது செய்து
விசாரித்ததாக, இதுவரை
எந்த செய்தியும் வந்ததாக
தெரியவில்லை...
என்ன நடக்கிறது ? ...
ஏழை எளியவர் என்றால்
உடனே பாயும் சட்டம்,
அதிகார வர்க்கத்திற்கு
வேண்டியவர்கள் என்றால் பம்முமா...?
மக்கள் எல்லாவற்றையும்
கண்காணித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்...
எல்லா வினைக்கும்
எதிர்வினை உண்டு..." என குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவை குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன், "தமிழ் சினிமாவின் ஒரே ஆண்மகன் ராஜ்கிரண்." எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











