நயன்தாரா -தனுஷ் விவகாரம் குறித்து பேசிய நடிகர் ராமராஜன்.. என்ன இப்படி சொல்லிட்டாரு!
சென்னை: நடிகை நயன்தாரா, தனுஷுக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன்பாக மூன்று பக்கங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது ஆவணப்படம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் அதில் தனுஷ் தயாரிப்பாளராக செயல்பட்ட நானும் ரவுடிதான் படத்தின் சில கிளிப்பிங்ஸ் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இந்த விஷயத்தில் 10 கோடி ரூபாய் கேட்டு தனுஷ் நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டு தனுஷை வறுத்தெடுத்திருந்தார் நயன்தாரா. நேரடியாகவே தனுஷை நயன்தாரா குற்றம் சாட்டி பேசியிருந்த நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகைகள் சிலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

நயன்தாரா -தனுஷ் விவகாரம்: நடிகை நயன்தாரா மற்றும் தனுஷ் விவகாரம் கடந்த இரு தினங்களாக பற்றி எரிந்து வரும் நிலையில் இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது விமர்சனங்களை அடுத்தடுத்து பகிர்ந்து வருகின்றனர். நயன்தாராவிற்கு ஆதரவாக நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், பார்வதி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்த நிலையில் இந்த விவகாரத்தில் நயன்தாராவிற்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பலரும் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். இந்த விவகாரத்தில் நடிகர் தனுஷ் எந்தவிதமாக ரியாக்ஷனும் காட்டாததும் பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
ராமராஜன் காட்டம்: இந்நிலையில் நயன்தாரா மற்றும் தனுஷ் விவகாரம் குறித்து நாம் யோசிக்க வேண்டியது இல்லை என்று நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார். இதுபோன்ற விஷயங்கள் அதிகமாக வந்துக் கொண்டிருப்பதாகவும் இதில் கவனம் செலுத்தாமல் நமது வேலைகளை நாம் பார்த்துக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். சாலையில் செல்லும்போது யாராவது சண்டை போட்டுக் கொண்டால், நாம் பார்த்தாலும் நமது வேலையை பார்த்துக் கொண்டு செல்வது போல இதையும் கடந்து செல்ல வேண்டும் என்றும் ராமராஜன் குறிப்பிட்டுள்ளார். திரும்பி திரும்பி இதுக்குறித்து கேட்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
டிக்கெட் விலை உயர்வு குறித்து ராமராஜன்: ஏழை எளிய மக்களுக்கு என்ன செய்யலாம் கஷ்டப்படுபவர்களுக்கு எப்படி உதவலாம், கஷ்டப்படும் பிள்ளைகளுக்கு பீஸ் கட்டலாமா என்று நாம் யோசிக்கலாம். அதைவிட்டுவிட்டு இதுபோன்ற விஷயங்களை மண்டையில் போட்டுக் கொள்ள வேண்டாம் என்றும் ராமராஜன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய ராமராஜன், திரையரங்குகளில் அதிகமான ரசிகர்களை வரவழைக்க செய்ய வேண்டிய விஷயம் குறித்தும் பேசியுள்ளார். திரையரங்குகளில் டிக்கெட் விலையை குறைத்தால் ஏழை எளிய மக்களும் ஏராளமானோர் திரையரங்குகளுக்கு படையெடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளுக்கு வராத ரசிகர்கள்: தான் நடித்த கரகாட்டக்காரன் படம் 500 நாட்கள் திரையரங்குகளில் ஓடியதற்கு காரணம் அப்போதெல்லாம் டிக்கெட் விலை இரண்டு ரூபாய், 3 ரூபாய் மற்றும் 4 ரூபாய்தான் இருந்தது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தற்போது டிக்கெட் விலை 150 ரூபாய் என ஆனதால் அனைத்து தரப்பினரும் திரையரங்குகளில் படம் பார்க்க வருவதில்லை என்றும் ராமராஜன் தெரிவித்துள்ளார். ஆலங்குளத்தில் தனது படத்தின் டிக்கெட் விலையை 50 ரூபாயாக ஆக்கியதால் அங்கு சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து மக்களும் கடைசி ஷோ வரை பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











