ஆமா நான் சாதி வெறியன் தான்...சமூக நீதின்னு பேசினாலே கோபம் வரும்.. திடீரென பொங்கிய ரஞ்சித்!
சென்னை: கவுண்டம்பாளையம் படத்தை இயக்கி ஹீரோவாக நடித்துள்ள நடிகர் ரஞ்சித் "நான் சாதி வெறியன் தான் என்றும் சமூக நீதின்னு யாரும் வந்து என்கிட்ட பேசாதீங்க அப்புறம் கோபம் வரும்" என பத்திரிகையாளர் சந்திப்பின் போது காரசாரமாக பேசியுள்ளார்.
பொன்விலங்கு திரைப்படத்தின் மூலம் 1993 ஆம் ஆண்டு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஞ்சித். சிந்து நதி பூ, மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன், பாரதி கண்ணம்மா, மறுமலர்ச்சி, நினைத்தேன் வந்தாய், நட்புக்காக, தேசிய கீதம், புதுமைப்பித்தன், சேரன் சோழன் பாண்டியன், நினைவிருக்கும் வரை, சபாஷ், பாண்டவர் பூமி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

வில்லனாகவும் ஹீரோவாகவும் பல படங்களில் இவர் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே மற்றும் பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களிலும் இவர் நடித்து வந்தார். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தற்போது கவுண்டம்பாளையம் படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
சாதி வெறியன்: எங்கள் வீட்டு பெண்களை நன்றாக படிக்க வைத்து வளர்த்தால் மற்ற சாதிக்கார இளைஞர்கள் நாடக காதல் மூலம் அந்தப் பெண்களை கடத்திச் சென்றால் அதற்குப் பெயர் காதல் என்றும் அவர்களுக்கு நீங்கள் நான்கு பேர் கையெழுத்து போட்டு திருமணம் செய்து வைப்பீர்கள், பெற்றோர்கள் கடும் வேதனை குறித்து உங்களுக்கு கொஞ்சமும் அக்கறை இருக்காது. நாடகக் காதல் என்று பேசினால் உடனே இவன் சாதி வெறியன் என முத்திரை குத்துகின்றார்கள். அப்படி என்றால் ஆமாம் நான் சாதி வெறியன் தான் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆவேசப்பட்டு நடிகர் ரஞ்சித் பேசியுள்ளார்.

சமூக நீதி பேசாதீங்க: சமூக நீதி என்று சொல்பவர்களை பார்த்தாலே கடுப்பாக தான் இருக்கும். நீங்கள் சொல்லும் எதுவும் சமூக நீதி இல்லை. இட ஒதுக்கீட்டின் போது சாதி அடிப்படையில் தானே அந்த சலுகைகளை பெறுகிறீர்கள் அப்போது மட்டும் சமூக நீதி பற்றி பேச மாட்டீர்கள். மற்ற இடங்களில் மட்டும் சமூக நீதி என்று பேசுவது ஏன் என்கிற கேள்வியை ரஞ்சித் எழுப்பியுள்ளார்.
ஆதரவு மற்றும் எதிர்ப்பு: கவுண்டம்பாளையம் திரைப்படம் சாதிய படமாக உருவாகி வருகிறது என்றும் நடிகர் ரஞ்சித் தொடர்ந்து சாதி வெறி ஊறிய நபராகவே மாறி வருகிறார் என அவருக்கு எதிரான கருத்துக்கள் குவிந்து வரும் நிலையில், அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பெற்றவர்களின் வலியைத்தான் அவர் பேசுகிறார் என்றும் கூறி வருகின்றனர். நாடக காதல் நடக்காமல் இருந்தால், ஆணவக் கொலையும் நடக்காது என ரஞ்சித் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











