நீங்களும் நாடக காதல்தான் செஞ்சீங்களா சார்?.. கருத்து சொன்ன ரஞ்சித்தை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
சென்னை: கோலிவுட்டில் 90க்ளில் நடிகராக வந்து சில படங்களில் நடித்தவர் ரஞ்சித். இவரது நடிப்பு பாண்டவர் பூமி உள்ளிட்ட திரைப்படங்களில் வெகுவாகவே பேசப்பட்டது. முதலில் ப்ரியா ராமனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்; விவாகரத்து பெற்று இன்னொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் அவர் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பா.இரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் முக்கியமான இயக்குநர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களது படங்களில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலையும், சாதி பார்க்கக்கூடாது, அடுத்தவரை ஒடுக்கக்கூடாது என்ற கருத்தையும் ஓங்கி ஒலிக்கவிடுகிறார்கள். அப்படி அவர்கள் எடுக்கப்படும் படங்களுக்கு பலமான ஆதரவு இருந்தாலும் அவர்களுக்கு எதிர் தரப்பில் இயங்கும் இயக்குநர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மோகன் ஜி: அப்படிப்பட்டவர்களில் ஒருவர் இயக்குநர் மோகன் ஜி. அவர் தனது படங்களிலும், தான் பேசும் மேடைகளிலும் ஆதிக்க வர்க்கத்தினருக்கு ஆதரவாகவும், பா.இரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் உள்ளிட்டோருக்கு எதிராகவும் கடுமையாக பேசிவருகிறார். ஆனால் அவரது பேச்சை பலர் ட்ரோல் செய்துவருகிறார்கள் என்பதுதான் கள எதார்த்தம்.
ரஞ்சித்: அவரது வரிசையில் இப்போது இணைந்திருக்கிறார் நடிகர் ரஞ்சித். பாண்டவர் பூமி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் அவர் இப்போது கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதன் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியானது. அதில் குறிப்பிட்ட சாதியினரையும், கட்சி தலைவரையும் கடுமையாக விமர்சனம் செய்து காட்சிகளை வைத்திருக்கிறார். மேலும் நாடக காதல் என்ற சொல்லையும் பயன்படுத்தியிருக்கிறார். அந்த ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்கள்.
ரஞ்சித் பேட்டி: இந்நிலையில் நடிகர் ரஞ்சித் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஓசிக பற்றிய ஒரு பகுதியை சென்சார் போர்டில் நீக்கிவிட்டார்கள். அதற்காக நான் அவர்களிடம் எவ்வளவோ போராடினேன். சரியான காதல் என்றால் பெற்றோர் அதற்கு நிச்சயமாக சம்மதிப்பார்கள். நான் காதலுக்கு எதிரி இல்லவே இல்லை. பெற்றோரை எதிர்த்து செய்யப்படும் திருமணங்களால்தான் ஆணவ கொலைகள் பல நடக்கின்றன என்பதுதான் உண்மை. எத்தனை பெற்றோர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் தெரியுமா.
காதலிக்க வயது இருக்கிறது: அதேபோல் காதலிப்பதற்கு என்று ஒரு வயது இருக்கிறது. அப்படி அந்த வயதை எட்டியும் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் சொத்தில் பங்கு கேட்கக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்தால் நாடக காதல் முடிவுக்கு வரும். அதாவது அம்மா, அப்பாவை எதிர்த்து திருமணம் செய்துகொண்டால் ஒரு பைசா கூட அந்த பெண் பிள்ளைக்கு கிடையாது என்று ஒரு சட்டம் கொண்டுவந்தால் நாடக காதலை கொஞ்சம் கட்டுப்படுத்தலாம்.
விழிப்புணர்வு வேண்டும்: பெண் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே கவுண்டம்பாளையம் படத்தின் கரு. யாரிடம் பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்ற பக்குவம் அவர்களுக்கு வரவேண்டும். வாழ்க்கையை தொலைத்த பெண்களின் பக்கத்தில் இருந்துதான் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் நடக்கும் விஷயங்களை வைத்தே இப்படத்தை நான் எடுத்திருக்கிறேன். இதை பார்த்து மக்களுக்கு விழிப்புணர்வு வந்தால் சந்தோஷம்தான். சமூக நீதி வேண்டும்தான். அது காதலுக்கும் பொருந்தும். ஆனால் பக்குவம் அவசியம் என்பது என்னுடைய கருத்து" என்றார்.
இந்தப் பேட்டியை பார்த்த நெட்டிசன்ஸ், 'காதலில் ஏது சார் நாடக காதல்.. காதல்னாலே உண்மைதானே சார்' என்று கமெண்ட்ஸ் செய்து ரஞ்சித்தை கடுமையாக ட்ரோல் செய்துவருகிறார்கள். மேலும் நீங்களே காதல் திருமணம்தான் செய்தீர்கள். இப்போது ஏன் பிரிந்தீர்கள். அப்போ நீங்களும் நாடக காதல்தான் செஞ்சீங்களா சார் என்றும் ஓபனாக கேள்விகளை கேட்டுவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











