கொக்கைன் போதைப்பொருள் என்றால்.. டாஸ்மாக்கில் விற்பது என்ன சத்து டானிக்கா? நடிகர் ரஞ்சித் விளாசல்!
சென்னை: மொத்த தென்னிந்திய திரையுலகமும் தற்போது காதும் காதுமாக பேசி வரும் விஷயம் கொக்கைன் போதைப்பொருள் விவகாரம் குறித்து தான். இந்த விவகாரத்தில் ஏற்கனவே நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அது மாத்திரமல்லாமல் இந்த விவகாரத்தில் மேலும் பல நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் ரஞ்சித் அண்மையில் அளித்த பேட்டியில் தனது எண்ணங்களை பகிர்ந்துள்ளார்.
அதாவது, இந்த விஷயத்தில் நடிகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் உடனுக்குடன் வெளியே தெரிகிறது. அது உண்மையில் வருத்தம் தான். இதை வாங்கி பயன்படுத்திவர்கள் மீது இருக்கும் வருத்தத்தை விட, இதை விற்பவர்கள் இன்னும் சிக்காமல் ஜம்முனு இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் பல லட்சம் கோடிகள் இந்த வியாபாரத்தில் புழங்குகிறது. இந்தியா போன்ற நாட்டில் போதைப் பொருட்கள் வளர்ந்து கொண்டு வருவது பேராபத்து. போதையால் ஒரு குடும்பமே அழிந்துவிடும். இதனால் வம்சமே இல்லாமல் போய்விடும்.
சினிமா இல்லையென்றால் சைக்கிள் கடை கூட வைத்து பிழைத்துக் கொள்வேன். ஆனால் நானே இல்லை என்றால், எனது குடும்பம் அழிந்துவிடும். பள்ளி கல்லூரிகள் வரை இந்த போதைப் பொருட்களின் புழக்கம் வந்துவிட்டது. ஹாஸ்டலுக்குள் சென்று பார்த்தால் அங்கிருக்கும் சின்ன சின்ன பொருட்களை வைத்து பார்க்கும்போது நமது குழந்தைகள் எந்த நிலைமையில் உள்ளார்கள் என்பதை நினைத்தால் வேதனையாக உள்ளது. ஜல்லிகட்டுக்காக நாம் எல்லோரும் எப்படி போராடினோமோ, அதேபோல் போதைக்கு எதிராகவும் நாம் எல்லோரும் இணைந்து போராட வேண்டும்.

டாஸ்மாக்கில் என்ன சத்து டானிக்கா?: கொக்கைன் மட்டும்தான் போதைப் பொருளா? தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக்கில் சத்து டானிக்கா விற்றுக் கொண்டு உள்ளார்கள். அதை தினமும் வாங்கிக் குடித்தால் உடலுக்கு நல்லதா? அதுவும் போதைதானே? புகைப்பிடப்பதால் காற்று மண்டலம் பாதிப்புள்ளாகிறது. நுரையிரல் கெட்டுப் போகிறது. போதை என்பது பேராபத்தானது. இதுதான் நம்மூரில் போராக இருக்க வேண்டும். அரசு இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், எடுக்க முடியும்.
அரசு நடவடிக்கை: இந்த கொக்கைன் வியாபாரத்தில் யாரெல்லாம் உள்ளார்கள்? அவர்களுக்குப் பின்னால் யாரெல்லாம் உள்ளார்கள் என்பது குறித்து நமக்கு இதுவரை தெரியவில்லை. ஆனால் அரசாங்கம் நினைத்தால் இதனை தடுக்க முடியும். காவல்துறை நினைத்தால் குற்றவாளிகளை பிடிக்க முடியும். என்னைப் பொறுத்தவரையில் எனக்கு போதை பார்ட்டிகளுக்கு அழைப்பு வந்ததில்லை. நானும் சென்றதில்லை. அதற்காக பார்ட்டிகளுக்கு செல்பவர்கள் எல்லாம் கொக்கைன் பயன்படுத்துவார்கள் எனக் கூறினால், அது தவறு. கொக்கைன் பயன்படுத்தாதவர்கள் கூட அந்த பார்ட்டிக்கு சென்றிருக்கலாம்.
ஒழிக்க வேண்டும்: கொக்கைனைப் பயன்படுத்தியவர்களை காலத்திற்கும் நடிக்க வைக்க கூடாது எனக் கூறினால், வேறு வேலை செய்து பிழைத்துக் கொள்ள முடியும். ஆனால் நீங்கள் இறந்து விட்டால், குடும்பம் இல்லாமல் போகிவிடும், வம்சமே அழிந்துவிடும். போதைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வது கடினம். போதைப் பொருட்களே இல்லை என்றால் அவர்கள் அமைதியாக இருப்பார்கள் அல்லவா. கொரோனா காலத்தில் சில பொருட்கள் இல்லை எனும்போது, இருக்கின்ற பொருட்களை வைத்து வாழ்ந்தோமே அதுபோல இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். நடிகர் ரஞ்சித் போதைக்கு எதிராக தெரிவித்துள்ள இந்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











