வீட்டு பணிப்பெண்களைச் சிறைபிடித்தாரா ரவி மோகன்? நீலாங்கரை வீட்டிற்குள் புகுந்த போலீஸ்!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் கடந்த சில மாதங்களாகவே தனது தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த சர்ச்சைகளில் சிக்கித் தவித்து வருகிறார். தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது.
உருகிய ரவி: ஆரம்பத்தில், ரவி தனது மனைவி ஆர்த்தியைப் பிரிய மிக முக்கியக் காரணம் பாடகி கெனிஷா தான் என கிசுகிசுக்கப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல, இருவரும் பொது நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக வருவதும், பட ப்ரோமோஷன்களில் ஜோடியாக வலம் வருவதுமாகவே இருந்தனர். ஆனால், கடந்த மாதம் திடீரெனப் பாடகி கெனிஷா, எனக்கு யாரும் வேண்டாம், நான் சோசியல் மீடியாவை விட்டுப் போகிறேன், ரவி மோகனை விட்டும் பிரிகிறேன் என ஆதங்கத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரவி மோகன், கண்ணீர் மல்க உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். அப்போது, என்னை புரிந்து கொண்ட ஒரே பெண் கெனிஷா தான், அவரையும் என்னிடம் இருந்து பிரித்துவிட்டீர்கள். எனக்கு முறைப்படி விவாகரத்து கிடைக்கும் வரை நான் இனி எந்தப் படங்களிலும் நடிக்க மாட்டேன், என்னால் இந்த மனநிலையுடன் நடிக்க முடிவில்லை என்றார்.

நீலாங்கரை போலீசார்: இப்படி ரவியைச் சுற்றித் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சென்னை நீலாங்கரை இல்லத்தில் ஒரு புதிய பூகம்பம் வெடித்துள்ளது. 'ஜெயம்' ரவி இல்லத்தில் பணியாற்றி வந்த இரண்டு பெண்களையும், அதில் ஒரு பெண்ணின் மகனான ஒரு சிறுவனையும் நேற்றிரவு முதல் ரவி மோகன் சட்டவிரோதமாகத் தனது வீட்டிற்குள் சிறைபிடித்து வைத்திருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியானது. வேலைக்குச் சென்றவர்கள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக நீலாங்கரை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, போலீசார் அதிரடியாக ரவி மோகன் வீட்டிற்குள் நுழைந்து விசாரித்தனர். அப்போது அந்த இரண்டு பெண்களும், சிறுவனும் ரவியின் வீட்டிற்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
திருட்டுப் புகாரா? சிறைபிடிப்பா?: இதுகுறித்து போலீஸார் ரவி தரப்பிடம் கேட்ட போது, ரவி மோகன், வீட்டில் பொருட்களைத் திருடிவிட்டனர். அந்தத் திருடப்பட்ட பொருட்களை மீட்க வேண்டும் என்பதற்காகவே இவர்களை வீட்டில் அமர வைத்துள்ளோம் எனக் கூறப்பட்டதாகத் தெரிகிறது.' உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்ட நீலாங்கரை போலீசார், திருட்டுப் புகார் இருந்தால் சட்டப்படி போலீசில் தான் புகார் அளிக்க வேண்டுமே தவிர, இப்படி யாரையும் சட்டவிரோதமாக வீட்டில் சிறைபிடித்து வைக்கக் கூடாது என நடிகர் ரவிக்கு அறிவுரைகளைக் கூறி, அந்த இரண்டு பெண்களையும் சிறுவனையும் மீட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களைச் சிறைபிடித்ததாகத் தனிப்பட்ட முறையில் புகார் அளித்தால், ரவி மோகன் மீது சட்டப்படி கடுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போது வரை பெண்கள் தரப்பில் இருந்து எந்தப் புகாரும் அதிகாரப்பூர்வமாக அளிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications