போதைமருந்து வாங்கும்போது நடிகர் ரவி தேஜா சகோதரர்கள் கைது!

போதை மருந்து வாங்கும்போது பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் சகோதரர்கள் மற்றும் நண்பர் ஆகிய மூவரை பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்த உகாண்டாவைச் சேர்ந்த நபரும் கைதுசெய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 50 கிராம் மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
கடந்த சில நாட்களாக ஹைதராபாத் நகரில் உகாண்டா மற்றும் நைஜீரிய நாட்டு நபர்கள் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிவதைக் கண்காணித்த போலீசார், அவர்களில் சிலரை கைது செய்து சோதனையிட்டனர். அவர்களிடம் போதைப் பொருள்கள் இருப்பதைக் கண்டுபிடித்து, கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்நிலையில் உகாண்டாவைச் சேர்ந்த ஒரு நபர் ஹைதராபாத்தின் முக்கியப் பிரமுகர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்வதாக ஹைதராபாத் மேற்கு மண்டல துணை ஆணையர் ஸ்டீபன் ரவீந்திராவுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த நபரை கடந்த இரு தினங்களாக ஸ்டீபன் ரவீந்திரா கண்காணித்து வந்தார்.
வியாழக்கிழமை அந்த நபருக்காக மூன்று பேர் காத்திருந்தனர். அவர்களில் இருவர் நடிகர் ரவி தேஜாவின் தம்பிகள் ரகு பாபு மற்றும் பரத். மற்றொருவர் ரவி தேஜாவின் நண்பரும் ஹைதராபாதின் முக்கிய வர்த்தகர் ஒருவரது மகனுமான நரேஷ். இவர்கள் மூவரும் கருப்பு நிற பாந்தர் வண்டியில் காத்திருந்த போது, உகாண்டா நபர் அவர்களைச் சந்தித்து போதைப் பொருளைக் கொடுத்தார். அப்போது காத்திருந்த போலீசார் நால்வரையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.
போதை மருந்தை 1 கிராம் பொட்டலங்களாகக் கட்டி வைத்திருந்தார் உகாண்டா நபர். அவர் பெயர் சீமா கிளமெண்ட் என்கிற விக்டர். ஒரு கிராம் பொட்டலம் ரூ 4000 வரை விலை பேசப்பட்டதாகத் தெரிவித்தார். மொத்தம் 48 பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.
உடனடியாக ரவி தேஜாவின் சகோதரர்கள் உள்ளிட்ட நால்வரும் கைது செய்யப்பட்டனர். அவர்களது காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ரவி தேஜாவின் பெயரில்தான் அந்தக் கார் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தின் போது ரவி தேஜா ஒரு படப்பிடிப்புக்காக வட இந்தியா சென்றிருந்தார்.


Click it and Unblock the Notifications











