இதுல என்ன வெட்கம்..? கொரோனாவால் பணக் கஷ்டம்.. தெரு தெருவாகக் காய்கறிகள் விற்கும் பிரபல நடிகர்!
மும்பை: கொரோனாவால் ஏற்பட்ட குடும்ப கஷ்டத்தைப் போக்க நடிகர் ஒருவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
உலகை மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனாவால் பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து விட்டனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் தற்போது ஒரு கோடியை கடந்துள்ளது.

தொழிலாளர்கள்
இந்தியாவிலும் இதன் தாக்கம் கடுமையாக இருக்கிறது. இந்த தொற்றால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதைக் கட்டுப்படுத்த லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டாலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால், தினமும் வேலை பார்த்து சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள், பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

மளிகை கடை
சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் தொழிலாளர்களை குறைத்துள்ளன. சில நிறுவனங்கள் சம்பளத்தைக் குறைத்துள்ளன. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சினிமா மற்றும் சின்னத்திரை தொழிலாளர்கள் மற்றும் துணை, நடிகர், நடிகைகள் கடும் பொருளாதார சிக்கலில் உள்ளனர். இந்நிலையில் சிலர் கொரோனா முடியும் வரை தங்கள் வாழ்வாதாரத்துக்காக, தொழிலை மாற்றியுள்ளனர்.

கருவாடு விற்பனை
இந்தி பட துணை நடிகர் ஒருவர் டெல்லியில் பழங்கள் விற்று வருகிறார். சிலர் மளிகை கடை நடத்தி வருகின்றனர். மராத்தி நடிகர் நடிகர் ரோஹன் பட்னேகர், கருவாடு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் மேலும் ஒரு மராத்தி நடிகர் காய்கறி விற்றுவரும் செய்தி இப்போது வெளியாகி இருக்கிறது. அவர் ரோஷன் சின்கே (Roshan Shinge).

காய்கறி விற்கிறார்
சில மராத்தி படங்களில் நடித்துள்ள இவர், புனேவில் காய்கறி மற்றும் பழங்கள் விற்று வருகிறார். 'ரகு 350' என்ற படத்தின் ஷூட்டிங்கிற்காக கடந்த மார்ச் 19 ஆம் தேதி புனே சென்றார் அவர். ஷூட்டிங் அடுத்த சில நாட்களுக்கு தள்ளிப் போக, திடீரென்று லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால், அங்கேயே தங்கிவிட்டார். பிறகு கையில் பணம் செலவழிந்துவிட, ஏதாவது செய்து பணம் சம்பாதிக்க முடிவு செய்தார்.

பொருளாதார நிலை
இதையடுத்து காய்கறி மற்றும் பழங்கள் விற்க முடிவு செய்து புனேவில் விற்று வருகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ' லாக்டவுனால் பொருளாதார நிலை பாதித்துவிட்டது. பணத் தேவை, முடிந்ததை செய்யும்படி கட்டாயப்படுத்தியது. என் நடிப்பு திறனையும் பயன்படுத்தி நகரில் காய்கறி விற்பனை செய்து வருகிறேன். சந்தையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட்டம் கூட்டமாக மக்கள் வருவதைக் கண்டேன்.

வீடுவீடாக விற்பனை
இதனால் இந்த வைரஸ் எளிதாகத் தாக்கலாம் என்று நினைத்ததால், வீடுவீடாக சென்று விற்பனை செய்ய முடிவு செய்தேன். அதன்படி செய்துவருகிறேன். வயிற்றுப் பசிக்கு பணம் சம்பாதிக்க வேண்டும், என் திறமையால் உலகில் புன்னகையை பரப்ப வேண்டும். இதற்காகவே இதை வியாபாரத்தை எடுத்துக்கொண்டேன். இதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை என்கிறார் ரோஷன் சின்கே.


Click it and Unblock the Notifications











