நயன்தாரா படத்தை சபிக்கிறாரா எஸ்.வி. சேகர்?.. படம் ஓடாது என நேரடியாகவே சொல்லிட்டாரே? புது பஞ்சாயத்து!
சென்னை: நடிகர் எஸ்.வி. சேகர் தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக அறியப்படுகிறார். இப்போது நடிப்பில் இருந்து கொஞ்சம் விலகி இருந்தாலும் அரசியலில் கொஞ்சம் ஆக்டிவாக இருந்தார். பாஜகவின் தீவிர தொண்டனாக இருந்த இவர், பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்னர் , பாஜகவில் இருந்து மெல்ல மெல்ல விலகினாரா அல்லது ஓரம்கட்டப்பட்டாரா என்பது கேள்வியாக உள்ளது. தற்போது திமுகவுக்கு நெருக்கமாக இருக்கும் இவர் மாதவன், நயன்தாரா, சித்தார்த் மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியாகியுள்ள டெஸ்ட் படம் ஓடாது என காட்டமாக விமர்சித்துள்ளார்.
எஸ்.வி. சேகர் சினிமா நடிகர் மட்டும் இல்லாமல், நாடக நடிகரும் கூட. அவருக்கு சினிமாவில் கிடைத்த புகழை விட இவரது நகைச்சுவை நாடகங்களுக்கு கிடைத்த புகழ் தான் அதிகம். மேலும் சினிமாவில் இவர் பெரும்பாலும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். வெகு சில படங்களில் மட்டுமே குணச்சித்திர கதாபாத்திரம், கதாநாயகன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சினிமாவில் இருந்து மெல்ல மெல்ல விலகினாலும், அரசியல் தளத்தில் எப்போதும் தொடர்பில் இருக்க கூடியவர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட எஸ்.வி. சேகர், இப்போது பாஜகவில் இருந்து முற்றிலும் விலகி விட்டார் என்றுதான் கூறவேண்டும். தற்போது திமுகவுக்கு நெருக்கமாக தன்னை காட்டிக் கொள்ளும் எஸ்.வி. சேகர், தற்போது சீரியலில் நடித்து வருகிறார். இவர் தற்போது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் மீனாட்சி சுந்தரம் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
நயன்தாரா: இப்படியான நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அதாவது, தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் டெஸ்ட். இந்த படம் தியேட்டரில் வெளியே வராமல் நேரடியாக, நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. கடந்த 4 ஆம் தேதியில் இருந்து ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

டெஸ்ட்: இந்த படம் கொஞ்சம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் மையக் கதை என்றால் அது கிரிக்கெட் தான். ஆனால் படத்திற்கு கிரிக்கெட் காட்சிகள் எந்த அளவிலும் உதவவில்லை எனவும் படம் பார்த்த ரசிகர்கள் விமர்சித்தார்கள். படத்தில் உருப்படியான காட்சி என்றால் அது மாதவன் நெஞ்சு மீது நயன்தாரா படுத்துக் கொண்டு பேசும் காட்சிதான் எனவும் விமர்சித்தவர்கள் உள்ளார்கள். படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட காரணம் என்ன என்ற கேள்வி இப்போதும் பலர் கேட்டு வருகிறார்கள்.
சாபம்: இப்படியான நிலையில் கடந்த 5 ஆம் தேதி டெஸ்ட் படத்திற்கு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டது. அதனைப் புகைப்படம் எடுத்துள்ள எஸ்.வி. சேகர், அதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படத்துக்கு, "என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு, நானாக விலகினாலோ, விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீசாகி தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது. இது வரலாறு. வரலாறு தொடர்கிறது" என பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவைப் பார்த்த பலரும் என்ன எஸ்.வி. சேகர் இப்படி ஒரு படத்திற்கு சபிக்கிறார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











