அந்த போலீஸ்காரரை இன்றும் தேடுகிறேன்...சமுத்திரக்கனி நெகிழ்ச்சி!
சென்னை : நடிகர் சமுத்திரக்கனி தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
இயக்கம், நடிப்பு என இரண்டு குதிரைகளிலும் வெற்றி சவாரி செய்துகொண்டிருக்கும் முக்கியமானவர்களில் ஒருவர் சமுத்திரக்கனி.
ஒரு சமூகப் பொறுப்புள்ள திரைக்கலைஞர் என்ற அங்கீகாரத்தையும் மக்கள் மத்தியில் பெற்றிருக்கிறார் சமுத்திரக்கனி.

சமுத்திரக்கனி
கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சமுத்திரக்கனி, சின்னத்திரையில் அண்ணி,அரசி, செல்வி போன்ற தொடர்களை இயக்கினார். உதவி இயக்குனராக இருந்த சமுத்திரக்கனி உன்னைச் சரணடைந்தேன் படத்தை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

திருப்புமுனை
நாடோடிகள் திரைப்படம் சமுத்திரக்கனிக்கு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. விமர்சகர்கள், ரசிகர்களின் வரவேற்பையும் மிகப் பெரிய வெற்றியையும் பெற்ற அந்தப் படம் பல மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் வெற்றிபெற்றது. போராளி, நிமிர்ந்து நில், அப்பா, போன்ற சமூகப் பிரச்சினைகளைப் பேசின.

ஓடிவந்துவிட்டேன்
குணசித்திர கதாபாத்திரம், வில்லன் என எந்த கதாபாத்திரத்திலும் மிரட்டும் சமுத்திரக்கனி, நடிகராக தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அதில், சிறுவயதில் இருந்தே சினிமா மீது எனக்கு தீராத காதல் இருந்தது. இதனால், எனது 14 வயதில், வீட்டிலிருந்து சென்னைக்கு ஓடிவந்து விட்டேன். சென்னையில் எனக்கு எங்குபோவது, யாரை பார்ப்பது என எதுவுமே தெரியவில்லை.

சாலையோரம் படுத்தேன்
எல்.ஐ.சியில் இறங்கி அண்ணாசாலை வரை நடந்தே சென்றேன். நடந்து நடந்து களைந்து போய் அண்ணாசாலையின் ஒரு இடத்தில் அப்படியே படுத்துவிட்டேன். அப்போது, ஒரு போலீஸ்காரர் என்னை எழுப்பி விசாரித்தார். நான், எனது சினிமா ஆசையை சொன்னேன். அப்போது, அவர், இந்த இடத்தில் படுப்பது பாதுகாப்பு கிடையாது என கூறி, அவருடன் என்னை அழைத்து சென்று மவுண்ட் ரோடு காவல்நிலையத்தில் அவர் இருக்கைக்கு அருகே என்னை படுக்க சொன்னார்.

போலீஸ்காரரை தேடுகிறேன்
காலையில் எழுந்ததும், நல்ல பையனா இருக்க, ஊருக்கு போய்விடு என்றார். இல்லை சார், நான் சினிமாவில் சாதிக்கவேண்டும் என்றேன். உடனே அவர் என் தலையில் கைவைத்து நன்றாக வருவடா என்றார். என் வாழ்க்கையில் என்றுமே நான் மறக்க முடியாத நாள் அந்த நாள். அந்த காவலரை தேடி காவல் நிலையத்திற்கு சென்றேன். ஆனால், அவர் பற்றி விவரம் கிடைக்கவில்லை, அந்த போலீஸ்காரரை இன்றும் தேடுகிறேன் என தனது வாழக்கையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை கூறினார்.


Click it and Unblock the Notifications











