எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க.. பட்டப்பகலில் டிவி நடிகரிடம் கொள்ளை.. காரை வழிமறித்து மிரட்டல்!
மும்பை: நடிகரின் காரை வழிமறித்து, மிரட்டி கும்பல் ஒன்று பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
இந்தியில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர், ஹப்பு கி உல்தான் பல்தான். காமெடி தொடரான இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற தொடர்.
இதில் நடித்திருப்பவர் சஞ்சய் சவுத்ரி. இவர் காரை வழிமறித்து மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்துள்ளது.

நடிகர் சஞ்சய் சவுத்ரி
மும்பையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பற்றி நடிகர் சஞ்சய் சவுத்ரி, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சீரியல் படப்பிடிப்புக்காக, எனது காரில் மிரா சாலையில் சென்றுகொண்டு இருந்தேன். பகல் 2.30 மணி இருக்கும். நீரூற்றைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது, காரை மெதுவாக ஓட்டினேன்.

மராத்தியில் திட்டினார்
அப்போது ஸ்கூட்டரில் வந்த ஒருவர், காரை நெருங்கி வந்தார். கார் கண்ணாடியைத் தட்டினார். பிறகு மராத்தியில் கண்டபடி திட்டிவிட்டு, காரை ஓரம் கட்டச் சொன்னார். ஓரமாக நிறுத்தினேன். கண்ணாடி கதவை இறக்கச் சொன்னார். இறக்கினேன். உள்ளே கையை விட்டு கதவைத் திறந்து திறந்து காருக்குள் ஏறிக்கொண்டார். என் செல்போனை பறித்தார்.

ரூ.20 ஆயிரம் கேட்டார்கள்
பிறகு தனது ஸ்கூட்டரில் மோதி விட்டதாகச் சொன்னார். இதனால் ஸ்கூட்டர் சேதமாகிவிட்டது என்றும் அதற்கு ரூ.20 ஆயிரம் வேண்டும் என்றும் சொன்னார். கையில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார். சிறிது நேரத்தில் இன்னும் 3 பேர் ஸ்கூட்டியில் வந்து அவருடன் சேர்ந்து கொண்டனர். உடனடியாக ஏடிஎம்-மில் இருந்து ரூ.20 ஆயிரம் ரூபாயை எடுத்து தா என்றார்கள்.

கண்டபடி திட்டினர்
என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சொன்னேன். அப்போது என் செல்போனை எடுத்துச் செல்வதாகக் கூறினார். பிறகு மராத்தியில் கண்டபடி திட்டினார். பிறகு போலீசுக்கு சொல்வேன் என்று மிரட்டினார்கள். என் பர்ஸை எடுத்து பணத்தைக் கொடுக்க ஆரம்பித்தேன். அதில் ரூ.200, ரூ.500 மட்டுமே இருந்ததை பார்த்தனர். அதைப் பிடுங்கிக் கொண்டனர்.

இங்கிருந்து கிளம்பு
எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். ஆனால், ரூ.20 ஆயிரம் வேண்டும் என்று மீண்டும் சொன்னார்கள். பிறகு அந்த 700 ரூபாயுடன் காரில் இருந்து வெளியேறினார்கள். நான் அங்கேயே இருந்தேன். நான் போலீசுக்கு போன் செய்வதாக நினைத்து, உடனடியாக இங்கிருந்து கிளம்பு என்றார்கள்.

திறந்திருக்கக் கூடாது
இவர்கள் பெரிய தவறைச் செய்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். நான் காரை நிறுத்தியது என் தவறு. பிறகு ஜன்னல் கதவை திறந்திருக்கக் கூடாது. வேலை இல்லாத காரணத்தால் பலர் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அதனால் தயவு செய்து தனியாக காரில் செல்லாதீர்கள். அப்படியே சென்றாலும் எங்கும் நிறுத்தாதீர்கள். இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











