Sarath Babu: கவலைக்கிடமான நிலையில் நடிகர் சரத்பாபு தீவிர சிகிச்சையில் அனுமதி.. என்னதான் பிரச்சினை?
ஐதராபாத் : தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் அதிகமாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் சரத்பாபு
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு அவரது உடல்நிலை மோசமான நிலையில், ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவரு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஐதராபாத் மருத்துவமனையில் சரத்பாபு : தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் சரத்பாபு. சத்யம்பாபு தீட்சிதலு என்ற இயற்பெயர் கொண்ட சரத்பாபு, கடந்த 1973ம் ஆண்டில் ராமராஜ்யம் என்ற தெலுங்குப்படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார். கடந்த 1977ம் ஆண்டில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் என்ற படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானார்.
கடந்த 50 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சரத்பாபு. கதாநாயகன், வில்லன், கேரக்டர் ரோல் என பல கேரக்டர்களை மிகவும் இயல்பாக நடிப்பதில் திறமை படைத்தவர் சரத்பாபு. தமிழில் ரஜினிகாந்த்துடன் முள்ளும் மலரும், நெற்றிக்கண், அண்ணாமலை, முத்து படங்களிலும் கமல்ஹாசனுடன் சலங்கை ஒலி படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.
தெலுங்கில் சரத்பாபு நடித்த முடு முல்ல பந்தம், சீதாகோக சிலுகா, சம்சாரம் ஒக சதரங்கம், அன்னய்யா, ஆபத்பாந்தவடு போன்ற படங்கள் மிகச்சிறந்த பெயரை பெற்றுத் தந்தன. இந்நிலையில் 71 வயதான சரத்பாபு, உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சரத்பாபுவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு செப்சிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். திரையுலகில் அடுத்தடுத்த இழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டுவரும் நிலையில் பழம்பெரும் நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டிப் பறந்தவர் சரத்பாபு. மிகவும் அழகான நடிகர்களுள் ஒருவராக கவனிக்கப்பட்டவர். இவரது நோய் பாதிப்பையடுத்து தற்போது அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைக்கு பலன் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது. ஆயினும் அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











