டான் படம் பார்த்து கண்கலங்கிய நடிகர் சரவணன்... எதுக்குன்னு அவரே சொன்ன விஷயத்தை பாருங்க!
சென்னை : நடிகர் சரவணன் பருத்தி வீரன் உள்ளிட்ட பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். தொடர்ந்து பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படம் பார்த்து கண்கலங்கியதாக அவர் வீடியோ மூலம் குறிப்பிட்டுள்ளார்.

1990களின் நாயகன்
1990களில் கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சரவணன். 1991ல் வைதேகி வந்தாச்சு படம் மூலம் நாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து 2003 வரையில் 26 படங்களில் நாயகனாக நடித்துள்ளார். தொடர்ந்து சில காலங்கள் இவரை படங்களில் காண முடியவில்லை. வாய்ப்புகள் குறைந்ததையடுத்து இவர் திரைத்துரையை விட்டு ஒதுங்கியிருந்தார்.

பருத்தி வீரனில் ரீ-என்ட்ரி
தொடர்ந்து 2007ல் வெளியான பருத்தி வீரன் படம் இவரது இரண்டாவது இன்னிங்சை துவக்கி வைத்தது. இந்தப் படம் நடிகர் கார்த்திக்கு அறிமுக படமாக அமைந்தது. கார்த்தியின் சித்தப்பாவாக இவர் படத்தில் செய்த அலப்பறைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்தப் படத்தை தொடர்ந்து கேரக்டர் ரோல்களில் இவர் நடித்து வருகிறார்.

துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது
இந்தப் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது இவருக்கு கிடைத்தது. விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3யிலும் போட்டியாளராக இவர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியதன் மூலம் போட்டியிலிருந்தே விலக்கப்பட்டார். தொடர்ந்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சரவணன்.

டான் படத்தை பார்த்த சரவணன்
அரண்மனை, கடைக்குட்டி சிங்கம், கோலமாவு கோகிலா போன்ற வெற்றிப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் சரவணன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கண்களை துடைத்தப்படி காணப்படுகிறார். இந்த வீடியோவில் தான் தற்போது டான் படத்தை பார்த்துவிட்டு திரும்பி வருவதாக குறிப்பிடுகிறார்.

கண்கலங்கிய நடிகர் சரவணன்
படத்தின் இயக்குநர் உள்ளிட்டவர்களுக்கு பாராட்டு தெரிவித்து இந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார். தொடர்ந்து டான் படம் தன்னை கண்கலங்க வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி தன்னுடைய அப்பாவை தனக்கு நினைவுப்படுத்தியதாகவும் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.

அப்பாவின் கண்டிப்பு
தன்னுடைய அப்பாவின் கண்டிப்பு உள்ளிட்டவற்றை இந்தப் படம் நினைவுப்படுத்தியதாகவும் தன்னுடைய பேராசிரியர்களை எஸ்ஜே சூர்யா நினைவுப்படுத்தியதாகவும் அவர் மேலும் கூறினார். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் தான் கண்கலங்கியதாகவும் அவர் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











