பயங்கர விபத்து.. டிவைடரில் மோதிய கார்..நடிகர் சர்வானந்த் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை : நடிகர் சர்வானந்த் கார் விபத்தில் சிக்கி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாளை நமதே, எங்கேயும் எப்போதும், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இவர் அண்மையில் கணா என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் வெளியானது.

விபத்தில் சிக்கினார் :
நடிகர் சர்வானந்த் நேற்றிரவு ஐதராபாத்தில் உள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ரேஞ்ச் ரோவர் காரில் சென்று கொண்டிருந்த போது, கார் சாலையின் நடுவே உள்ள டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. கார் அதிவேகத்தில் மோதியதில் காரின் ஏர்பேகுகள் வெளியானது. இதில் லேசான காயம் அடைந்த சர்வானந்த் தானாகவே காரில் இருந்து வெளியேறினார்.
மருத்துவமனையில் :
இதையடுத்து அருகிலிருந்தவர்கள் சர்வானந்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிலிம் நகர் சாலையில் அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சர்வானந்தின் காரை பறிமுதல் செய்தனர்.
இணையத்தில் பரவிய வதந்தி :
தெலுங்கு முன்னணி நடிகரான சர்வானந்த், சாப்ட்வேர் என்ஜினீயரான ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமண தேதி விரைவில் அறிவிப்பதாக இருந்த நிலையில், சர்வானந்த்-ரக்ஷிதா ரெட்டி திருமணம், நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிட்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவின. தவிர்க்க முடியாத காரணங்களால் திருமணம் நிறுத்தப்பட்டதாகவும் வதந்தி பரவியது.

சோகத்தில் ரசிகர்கள் :
இணையத்தில் பரவிய வதந்தியை அடுத்து, குடும்பத்தினர் கூடி ஜூன் 3ந் தேதி திருமணம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். திருமணம் அடுத்த வாரம் நடைபெற உள்ளதால், திருமண ஏற்பாடுகளை நடிகர் சர்வானந்த் மும்முரமாக கவனித்து வந்த நிலையில் விபத்தில் சிக்கினார். இவர் விபத்தில் சிக்கி உள்ளது இவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
புதிய படத்தில் :
நடிகர் சர்வானந்த், இயக்குநர் ஸ்ரீராம் ஆதித்யாவின் இயக்கத்தில் தயாராகி வரும் புதியப் படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். இந்த முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் 40 நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு சில நாட்களுக்கு முன்புதான் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











