வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்தடுத்து மிஸ்ஸான வாய்ப்புகள்.. சசிக்குமார் ஆதங்கம்!
சென்னை: நடிகர் சசிக்குமார் நடிப்பில் தற்போது நந்தன் என்ற படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அவர் இந்த படத்தின் ப்ரோமோஷன்களுக்காக அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்த நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருந்த படங்கள் குறித்தும் தன்னுடைய பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் அமீருடன் இணைந்து நடிக்க இருந்த சந்தர்ப்பம் கைநழுவி போனதாகவும் சசிகுமார் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். விரைவில் இவர்கள் இருவரும் இணையும் சந்தர்ப்பம் வாய்க்கும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்தடுத்து அயோத்தி, கருடன், நந்தன் படங்களின்மூலம் சசிக்குமார் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளார்.

நடிகர் சசிக்குமார்: நடிகர் சசிக்குமார் சுப்பிரமணியபுரம் படத்தில் இயக்குனராகவும் நடிகராகவும் மாஸ் காட்டியவர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து இயக்கத்தில் மட்டுமில்லாமல் நடிகராகவும் மற்ற இயக்குனர்களின் கூட்டணியில் இணைந்தும் பல படங்களில் நடித்துள்ள சசிக்குமார் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அயோத்தி, கருடன் உள்ளிட்ட படங்கள் வெளியாகி மிகப்பெரிய கவனத்தை பெற்றன. இந்நிலையில் தற்போது இயக்குனர் சரவணன் இயக்கத்தில் நந்தன் படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்காக பல்வேறு ப்ரோமோஷன்களில் சசிகுமார் தொடர்ந்து ஈடுபட்டதை பார்க்க முடிந்தது.
நந்தன் பட பிரமோஷன்கள்: அடுத்தடுத்து பல பேட்டிகளை கொடுத்திருந்தார் சசிக்குமார். அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறனுடன் தான் இணையவிருந்த படங்கள் குறித்து அவர் தன்னுடைய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். ஓடிடியில் வெளியிடுவதற்காக ஒரு படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் தான் நடிக்க இருந்ததாகவும் இது குறித்து அனைத்து டிஸ்கஷன்களும் நிறைவடைந்த நிலையில் இந்தப் படம் எடுக்கப்படாமல் கைவிடப்பட்டதாகவும் சசிகுமார் தெரிவித்துள்ளார். இதே போல தன்னையும் அமீரையும் இணைத்து ஒரு படத்தை இயக்க வெற்றிமாறன் திட்டமிட்டு இருந்ததாகவும் இந்த படமும் கைநழுவி போனதாகவும் சசிக்குமார் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன்: தமிழின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன். சமீபத்தில் தேவரா பட பிரமோஷனின்போது வெற்றிமாறனுடன் இணைந்து நேரடி தமிழ் படத்தில் நடிக்கும் தனது விருப்பத்தை ஜூனியர் என்டிஆர் வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் வெற்றிமாறனுடன் இணையும் பட வாய்ப்புகள் பேச்சளவிலேயே கைநழுவியது குறித்து சசிக்குமார் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவரது சுப்ரமணியபுரம் படம் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை கருத்தில் கொண்டே பரமன் மற்றும் அழகர் கேரக்டர்களை தான் உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிடித்தமான கேரக்டர்கள்: தொடர்ந்து அடுத்தடுத்து 7 படங்களை எடுத்து தான் அதிகப்படியான கடனில் சிக்கியதாகவும் அதிலிருந்து மீண்டுவரவே வருடங்கள் பிடித்ததாகவும் அதன்காரணமாகவே தான் இயக்கத்தில் ஈடுபடவில்லை மற்றும் அழுத்தமான கேரக்டர்களுக்காக காத்திருக்காமல் கிடைத்த கேரக்டர்களில் நடித்ததாகவும் முன்னதாக மற்றொரு பேட்டியில் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அவற்றிலிருந்து மீண்டு அவர் தற்போது தனக்கு மிகவும் பிடித்தமான கேரக்டர்களில் நடித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











