செய்வோம்ல..! கொரோனா விழிப்புணர்வு... தன்னார்வலராக மதுரை போலீஸுடன் இணைந்த பிரபல ஹீரோ சசிகுமார்!
சென்னை: கொரோனா விழிப்புணர்வுக்காக, தன்னார்வலராக, மதுரை போலீஸுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார், பிரபல ஹீரோ சசிகுமார்.
Recommended Video
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவலை அளிக்கிறது
அமெரிக்காவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் பாதிப்பு குறைவு என்றாலும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

பாதுகாப்பு பணி
ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று அரசு கூறினாலும் சில இடங்களில் அதை மீறி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர், நடிகைகளில் சிலர் தன்னார்வலராக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழிப்புணர்வு
நடிகை நிகிலா விமல், கேரளாவில் கண்ணூரில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து கால்சென்டரில் இணைந்துள்ளார். மக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை ஒருங்கிணைக்கும் கால்சென்டர் இது. தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா, போலீசாருடன் இணைந்து விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டார்.
நடிகர் சசிகுமார்
அதே போல இயக்குனரும் நடிகருமான சசிகுமார், மதுரை போலீசாருடன் இணைந்து மூன்று நாட்கள் விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதில் சாலையில் நின்று, பைக்கில் செல்பவர்களிடம் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தினார். கொரோனாவின் தீவிரம் குறித்தும் பிரசாரம் மேற்கொண்டார். இதுபற்றி சசிகுமாரிடம் கேட்டபோது கூறியதாவது:

புதிய அனுபவம்
'அரசும் போலீஸும் தொடர்ந்து பிரசாரம் செய்தாலும் மக்களுக்கு கொரோனாவின் தீவிரம் புரியவில்லை. பலர் பைக்கில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். நமது நல்லதுக்காகத்தான் சொல்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. தயவு செய்து வீட்டில் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள் என்ற பிரசாரத்தை மேற்கொண்டேன். இந்த இக்கட்டான நேரத்தில் தன்னார்வலராகப் பணியாற்றியது புதிய அனுபவமாக இருந்தது. இவ்வாறு கூறினார்.


Click it and Unblock the Notifications











