பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவாக ராகியுடன் பால்: சத்யராஜ் மகளின் கோரிக்கையை ஏற்ற அரசு
சென்னை: நடிகர் சத்யராஜ் மகளின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுள்ளது.
தமிழ்த் திரை நடிகர்களில் மிகச் சிறந்த பண்பாளராகவும், இயன்ற உதவிகளை செய்யும் நல்ல மனிதராகவும் இருப்பவர் சத்யராஜ். சத்யராஜின் மகள் திவ்யா எடுத்த முயற்சியினால் தமிழக பள்ளி மாணவர்களின் ஆரோக்கியம் மேம்படப்போகிறது.

சத்யராஜின் மகளும் நடிகர் சிபிராஜின் அக்காவுமான திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். அப்பா சத்யராஜை போலவே இவரும் சமூகம் சார்ந்த விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
தமிழக பள்ளி மாணாக்கர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் சத்துணவில் ராகியுடன் பால் கொடுக்கலாம் என திட்டமிட்டு, அது தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக கல்வி அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்தும் விளக்கமளித்துள்ளார். திவ்யாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதல்வர் தற்போது அத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இவர் எடுத்த முயற்சியின் பலனாக தற்போது அட்சய பாத்திரம் என்ற அறக்கட்டளை மூலம், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு ராகியுடன் கூடிய பால் காலை உணவாக வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து அமலுக்கு வர உள்ளது.
மாணாக்கர்களின் ஆரோக்கியத்திற்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது. அட்சயப் பாத்திரம் அறக்கட்டளையின் மூலம் முயற்சியெடுத்ததற்கு வெற்றி கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் திவ்யா சத்யராஜ். பல்வேறு சமூகப் பிரச்சனைகளுக்கு திவ்யா குரல் கொடுப்பதைப் பார்த்து என் அப்பா போலவே அக்காவும் தைரியமானவர் என சிபிராஜ் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











